தமிழகம் முழுவதும் லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான 173 கோடி சொத்துக்கள் முடக்கம்!!

லாட்டரி விற்பனை மூலம் கொடிகட்டிப் பறந்தவர் சான்டியாகோ மார்ட்டின். கோவையைச் சேர்ந்த இவர், தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடைக்கு பிறகு அசாம், மேற்குவங்கம், சிக்கிம் என இந்தியாவின் பல மாநிலங்களிலும் இவரது லாட்டரி விற்பனை கொடிகட்டிப் பறந்து வருகிறது.

கடந்த 2009-2010-ம் ஆண்டில் லாட்டரி விற்பனை மூலம் கிடைத்த ரூ. 910.3 கோடி வருவாயை மறைத்து, 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்ததாகவும், லாட்டரி விற்பனை முறையாக நடக்கும் சிக்கிம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களில் போலியான கணக்குகள் மூலம் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியுள்ளதாகவும் மார்ட்டின் மீது குற்றச்சாட்டு உள்ளது. இதையடுத்து அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான சொத்துக்களை அவ்வப்போது அமலாக்கத்துறையினர் முடக்கி வந்தனர். இந்நிலையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் லாட்டரி விற்பனை மட்டுமின்றி மில், மால்கள், திரையரங்குகள் என்று பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில்தான் அவருக்கு சொந்தமான ரூ.173 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.119.6 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கினர். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான ரூபாய் 136 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கினர்.
