இந்நிலையில் விலைமதிப்பற்ற இந்த பைபிள் காணாமல் போய்விட்டதாக சரஸ்வதி மகால் அருங்காட்சியத்தின் நிர்வாக அலுவலர், தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் கடந்த 2005-ம் ஆண்டு புகார் அளித்தார். பின்னர் இந்த புகார் கண்டுபிடிக்க முடியாத வழக்காக முடித்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு மீண்டும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சிலை கடத்தல் தடுப்பு போலீஸில் இது தொடர்பாக புகார் அளித்தார். இதன் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், தனிப்படை அமைத்து 2005-ம் ஆண்டுக்கான பதிவேடுகளை ஆய்வு செய்த போது, சில வெளிநாட்டினர் குழுவாக சரபோஜியின் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சிக்கு அருங்காட்சியத்திற்கு வந்தது தெரியவந்தது.

மேலும் வெளிநாட்டு அருங்காட்சியங்களின் வலைதளங்களை வைத்து தேடிய போது லண்டனைச் சேர்ந்த கிங்ஸ் கலெக்ஷன் மியூசியத்தில் தரங்கம்பாடியில் அச்சடிக்கப்பட்ட சரபோஜி மன்னரின் கையெழுத்தோடு கூடிய பைபிள் இருப்பதை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கண்டுபிடித்தனர்.