தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி துவக்கம்
தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி துவக்கம்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட 70 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயக் கணக்குகள் முடித்தல் மற்றும் பொதுமக்களுடைய கோரிக்கை மனுக்களை பெறுதல் தொடர்பான ஜமாபந்தி நிகழ்ச்சி தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி அலுவலரும் சீர்காழி வருவாய் கோட்ட அலுவலருமான தநாராயணன் தலைமையில் துவங்கியது.

தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட மேலையூர் சரகத்தில் உள்ள கஞ்சாநகரம், கருவாழக்கரை, மேலையூர், மேலப்பெரும்பள்ளம், கீழையூர், கிடாரங்கொண்டான், கீழப்பெரும்பள்ளம், தலையுடையவர் கோயில் பத்து உள்ளிட்ட 12 கிராமங்களுக்கான வருவாய் கணக்குகள் முடித்தல் மற்றும் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆதரவற்ற முதியவர்கள் இரண்டு நபர்களுக்கு முதியோர் உதவித்தொகையும், வயது முதிர்ந்த ஆதரவற்ற விதவைகள் 15 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளும் வருவாய் கோட்ட அலுவலர் நாராயணன் வழங்கினார். ஜமாபந்தி நிகழ்ச்சியில் வருவாய்க் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளரும் வட்டாட்சியருமான சண்முகம், தரங்கம்பாடி வட்டாட்சியர் புனிதா, சமூக பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியர் இந்துமதி, நில எடுப்பு தனி வட்டாட்சியர் சுந்தரி, வட்ட வழங்கல் அலுவலர் பாபு, தோட்டக்கலை அலுவலர் கவிராகவி, உதவி தோட்டக்கலை அலுவலர் ஜோவிதா மற்றும் துறை சேர்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
