தளவாய்புரம் பகுதியில் பலத்த மழை.. விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி…

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள தளவாய்புரம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. விருதுநகர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலையில் இருந்து வெயில் இல்லாத நிலையில், மேகமூட்டத்துடன் வானம் இருந்தாலும் கடுமையான வெட்கை இருந்து வந்தது. அவ்வப்போது லேசான தூறல்மழை ஆங்காங்கே பெய்தது.
இன்று மாலை தளவாய்புரம், வத்திராயிருப்பு, கூமாப்பட்டி ஜமீன் கொல்லங்கொண்டான் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் இந்தப்பகுதி விவசாயிகளும், பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்தப்பகுதியில் விவசாயப் பணிகள் துவங்கியுள்ள நிலையில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக, விவசாயம் செழிப்பாக நடைபெறும் என்று விவசாயிகள் நம்பிக்கையுடன் கூறினர்.