மகளை பாலியல் வல்லுறவு செய்த தந்தை உள்பட இருவரை தஞ்சாவூர் நீதிமன்றம் ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு இரு மகள்கள் பிறந்தனர். இக்குழந்தைகள் சிறு வயதில் இருந்தபோது தாய் இறந்துவிட்டார். இதையடுத்து, இரு குழந்தைகளையும் பாட்டியும், சித்தியும் அழைத்துச் சென்று வளர்த்து வந்தனர்.


இதனிடையே, 2016 ஆம் ஆண்டு இரு குழந்தைகளையும் தந்தை தன் வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது, மூத்த மகளை தந்தை அடிக்கடி பாலியல் வல்லுறவு செய்தார். இது பற்றி தனது தங்கையிடம் அச்சிறுமி கூறி அழுதார். இது குறித்து பக்கத்து வீட்டைச் சேர்ந்த தாத்தா முறையிலான 67 வயது உறவினரிடம் தங்கை முறையிட்டார்.
இது தொடர்பாக தந்தையிடம் தாத்தா நியாயம் கேட்பது போல சப்தமிட்டு பேசி, இரு சிறுமிகளையும் அழைத்துக் கொண்டு தன் வீட்டில் தங்க வைத்தார். ஆனால், மூத்த சிறுமியை தாத்தா முறையிலான உறவினரும் பாலியல் வல்லுறவு செய்தார். இதனிடையே, அச்சிறுமி வயதுக்கு வந்தார். மாத விடாய் காலத்தில் மூத்த சிறுமியை தந்தை வீட்டுக்கு உறவினர் அனுப்பி வந்தார். அப்போது, சிறுமியை தந்தை தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்தார். இதனால், கருவுற்ற சிறுமியின் கருவை கலைக்க தந்தை முயற்சி செய்கிறார். ஏழு மாதங்கள் கடந்த பிறகு அச்சிறுமியின் வயது பெரிதாகிவிட்டதன் மூலம் இப்பிரச்னை வெளியில் தெரிய வந்தது. தற்போது அச்சிறுமிக்கு வயது 15.
இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ய பட்டுள்ளது இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து தந்தையையும், தாத்தாவையும் 2020, ஜூலை 1 ஆம் தேதி கைது செய்தனர்.
இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞர் சசிரேகா ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தரராஜன் விசாரணை செய்து தந்தைக்கும், தாத்தாவுக்கும் ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ. 50,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.
