மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் கொலை வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் சிறை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் சோதியக்குடி கிராமத்தில் இடப்பிரச்னை காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தில் இளைஞரை அடித்துக் கொன்ற வழக்கில் அண்ணன், தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மயிலாடுதுறை மாவட்டம் ஆனைக்காரன்சத்திரம் காவல் சரகத்திற்குள்பட்ட சோதியக்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(30). இவருக்கும் அருகே உள்ள சகோதரர்கள் பாஸ்கரன் (43), ஆசைதம்பி(35) என்பவர்களுக்கும் இடையே வீடுகட்டுவதில் இடம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2019-ஆம் டிசம்பர் 8-ஆம் தேதி ஆண்டு பாஸ்கரன், ஆசைதம்பி இருவரும் சத்தியமூர்த்தியை கட்டை மற்றும் கற்களால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த சத்தியமூர்த்தி சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆனைக்காரன்சத்திரம் போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக அரசு வழக்குரைஞர் ராம.சேயோன் ஆஜர்படுத்திய 20 சாட்சிகளிடம் விசாரணை செய்ததன் அடிப்படையில் சத்தியமூர்த்தி கொலையானது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாஸ்கரன், ஆசைதம்பி இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளங்கோவன் தீர்ப்பளித்தார்.
படவரி: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஸ்கரன், ஆசைதம்பி சகோதரர்களை சிறைக்கு அழைத்துச் சென்ற டிஎஸ்பி லாமேக் மற்றும் போலீஸார்.
