“மோடி அரசே வெளியேறு” என்ற அரசியல் முழக்கத்தை முன் வைத்து நடைபெறும் பேரணியில் சிவப்பு சேலை வெள்ளை சட்டை அணிந்து மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானம்.

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட பொதுக்குழு குழு கூட்டம் கும்பகோணம் ஏஐடியூசி கூட்ட அரங்கில் இன்று மாவட்ட தலைவர் பி.தாமரைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் ஜீ.மஞ்சுளா பங்கேற்று மாநிலக்குழு முடிவுகளை விளக்கி உரையாற்றினார்.

சங்கத்தின் மாவட்ட பணிகள் மற்றும் உறுப்பினர் பதிவு இயக்கம் குறித்து மாவட்டச் செயலாளர் டி.கண்ணகி பேசினார். மாவட்ட நிர்வாகிகள் க.கண்ணகி எஸ்.பரிமளா, மு.கவிதா, என்.பிரபா, ஜெ.சந்திரா உட்பட மாவட்ட முழுவதும் இருந்து திரளான பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையிலிருந்து பேரணி நடைபெற்றது. மாவட்ட பொதுக்குழு குழுவில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

வருகிற ஆகஸ்ட் 6, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் திருப்பூர் மாநகரில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. “மோடி அரசே வெளியேறு” என்ற அரசியல் முழக்கத்தை முன் வைத்து ந்டைபெறும் பேரணியில் நமது மாவட்டத்தில் இருந்து சிவப்பு சேலை வெள்ளை சட்டை அணிந்த ஆயிரம் பெண்கள் பங்கேற்பது.

பாராளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்குவதற்கான மசோதா கடந்த 1996-ஆம் ஆண்டு செப்டம்பர் 12 அன்று மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்டது. பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைபடுத்திடும் வகையில் மத்திய பிஜேபி அரசு மேலும் காலம் கடத்தாமல் மசோதாவை மக்களவையில் உடனடியாக தாக்கல் செய்து சட்டமாக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல்,எரிவாயு விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கிராமப்புற பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. பெண்கள் குடும்பம் நடத்த முடியாத நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே மத்திய அரசு பெட்ரோல்,டீசல்,எரிவாயு விலையை உயர்வை திரும்ப பெற வேண்டும்.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் ஒரு சிலிண்டர் முழு மானியத்தில் வழங்கிட முன்வர வேண்டும்.

உணவுக்கு பயன்படுத்தப்படும் பாமாயில் போன்ற எண்ணெய் வித்து பொருட்களால் கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதல்களால் பெண்கள் பாதிக்கப்பட்டு உடல் உபாதைகளுக்கு ஆட்படுகிறார்கள். பாமாயில் போன்ற எண்ணெய் வித்து பொருட்களை பொது விநியோகத் திட்டத்தில் வழங்குவதை தடை செய்வதோடு, பாரம்பரிய வேளாண் முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதோடு, தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை குறைந்த விலையில் கூட்டுறவு கிராம அங்காடிகள் மூலம் வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
60 வயது கடந்த பெண்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் பெறுவதில் இருக்கிற நிபந்தனைகளை தளர்த்தி எளிதாக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகம் சென்று விண்ணப்பித்து பெறுவதில் ஏற்படுகிற இடையூறுகளையும் லஞ்சலாவன்யங்களை ஒழித்திட வேண்டும். ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஓய்வூதிய பயனாளிகள் தேர்வு செய்யும் சிறப்பு முகாம்களை நடத்தி உடனுக்குடன் அனுமதி வழங்கிட வேண்டும்.
பொதுவிநியோக திட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே நேரில் சென்று விநியோகம் செய்வதை ஆந்திர அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால் ஊழல் முறைகேடுகளின்றி தடையின்றி உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். தமிழக அரசும் ஆந்திர அரசின் நடைமுறையை பின்பற்றி பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் உணவுப் பொருட்களை வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கும் நடைமுறையை செயல்படுத்திட வேண்டும்.
தற்காலிக பணியாளர்களாக தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றிவரும் பெண்கள் அனைவருக்கும் நிரந்தரபணியாளர்களுக்கு வழங்கப்பட்டும் பணிப்பலங்கள அனைத்தையும் வழங்கி நிபந்தனையின்றி நிரந்தரபணியாளர்களாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
