BREAKING NEWS

கணியம்பாடியில் காவல் உதவி ஆய்வாளருடன் கைகோர்த்துக் கொண்டு திருட்டு வாகனங்களை விற்பனை செய்து வாரி சுருட்டும் இருசக்கர வாகன மெக்கானிக்!

கணியம்பாடியில் காவல் உதவி ஆய்வாளருடன் கைகோர்த்துக் கொண்டு திருட்டு வாகனங்களை விற்பனை செய்து வாரி சுருட்டும் இருசக்கர வாகன மெக்கானிக்!

வேலூர் மாவட்டம், கணியம்பாடியில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்துள்ளவர் மெக்கானிக் ரமேஷ்(50). இவருக்கு நண்பராக கணியம்பாடியைச் சேர்ந்த புக்கா என்கிற வினோத் (38) இருந்து வருகிறார்.

இந்நிலையில் மெக்கானிக் ரமேஷ் வேலூர் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிலம்பரசன் என்பவரது உதவியுடன் சாராயம் கடத்திச் செல்லும் வாகனங்கள் மற்றும் திருட்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டு பொது ஏலம் விடப்படும் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை ஏலம் எடுத்தும் இவரது மெக்கானிக் கடையில் கொண்டு வந்து குவித்து வைத்துள்ளார்.

இதில் காவல் துறையின் உதவியுடன் இவர் இருசக்கர வாகனங்களை கொண்டு வந்து அதனை உதிரி பாகங்களாக மாற்றி விற்பனை செய்வதும், திருட்டு வாகனங்களுக்கு பதிவு எண், சேஸ் நம்பர் மாற்றுவது உள்ளிட்ட பணிகளை செய்து அவற்றை விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்த்து வருகிறார்.

குறிப்பாக சாராய வழக்கில் நான்கு வண்டிகள் பிடிபடுகிறது என்றால் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் மூன்று இருசக்கர வாகனங்களை இந்த மெக்கானிக்கல் ரமேஷிடம் கொடுத்து விடுகிறார்.

இதை காவல்நிலையத்தில் கணக்கு காண்பிப்பதில்லை. அவர் கொண்டு வந்து ஏதாவது ஒரு நம்பரை பொருத்தி சேஸ் நம்பரை மாற்றி அந்த வாகனங்களை நல்ல விலைக்கு விற்பனை செய்து வருகிறார்.

இப்படி ஒரு வாகன திருடனுடன் இணைந்து கொண்டு காவல் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் செயல்படுவது இன்றைக்கு வெட்ட வெளிச்சமாக வந்துள்ளது.

இது கணியம்பாடியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். அவர்கள் தரப்பிலேயே இந்த தகவலும் உலா வர ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் மத்தியிலும் இதே தகவல் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இப்படி இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை மாற்றுவது சேஸ் நம்பரை மாற்றுவது ஆகிய பணிகளுக்கு தலா ஒரு வாகனத்திற்கு ரூபாய் 5000 வசூல் செய்கிறாராம் இந்த மெக்கானிக் ரமேஷ்.

அதே போன்று திருடப்பட்டு வரும் வாகனங்களை வாங்கி சுமார் ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்து வருகிறார் ரமேஷ் என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. சிலம்பரசன் என்ற காவல் உதவி ஆய்வாளர் கார் மெக்கானிக் சதீஷ் என்பவருடன் கைகோர்த்து கொண்டு வலம் வருவதாக கூறப்படுகிறது.

அதாவது இரவில் தனது காரிலேயே காவல் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் ரோந்து என உலா வருவதாக கூறப்படுகிறது. அந்த காரை அதாவது சிலம்பரசனுக்கு சொந்தமான காரை கார் மெக்கானிக் சதீஷ் தான் ஓட்டுகிறாராம்.

இவர் செல்லும் இடமெல்லாம் வசூல் செய்து கொண்டு, கார் ஓட்டிய சதீஷூக்கும் ஒரு தொகையை தருவதாக கூறப்படுகிறது. இந்த கார் மெக்கானிக் சதீஷ் சாத்து மதுரையைச் சார்ந்தவர் ஆவார்.

இந்த காவல் உதவி ஆய்வாளர் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சார்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தனியார் பைனான்ஸ் வாகனங்கள் கைப்பற்றப்படும் போது அந்த வாகனங்களையும் இந்த மெக்கானிக் ரமேஷ் கொண்டு வந்து அனைத்தையும் கலந்து விற்பனை செய்வதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.

இப்படி இரவு நேரத்தில் ரோந்து செல்லும்போது மணல், மண் உள்ளிட்ட கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படும் லாரிகளை நிறுத்தி வசூல் செய்யப்படுகிறது.

அப்படி வசூல் செய்யும் போது மாமூல் கறாராக வசூல் செய்யப்படுகிறது. இதில் புக்கா என்கிற வினோத் மற்றும் கண்ணதாசன் உள்ளிட்டோர் அந்த லாரி ஓட்டுநர்களிடம் தங்களுக்கும் மாமூல் வழங்க வேண்டும் என்று தொந்தரவு செய்வதாக தகவல் உலா வருகிறது.

இந்த கண்ணதாசன் என்பவர் பிஷப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த புக்கா என்கிற ரமேஷ் தன்னுடன் 20 நபர்களை வைத்துக் கொண்டு, ஜேசிபி, லாரி உள்ளிட்டவைகளை வைத்துள்ள நபர்களை கண்டறிந்து பணம் பறிக்கும் நோக்கத்தில் தொல்லை செய்கின்றார்.

இது போன்ற திருட்டு வாகனங்களை வாங்கிக் கொண்டு பலர் தாலி செயின் பறிப்பது மற்றும் சமூக விரோதச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதும் நாம் விசாரித்த தகவல்களின் வாயிலாக தெரியவந்துள்ளது.

அதாவது புக்கா என்கிற வினோத்துடன் சண்முகம், சூர்யா, அசோக், சீனு உள்ளிட்டவர்கள் செயல்படுவதாக கூறப்படுகிறது. அனைவரையும் மிரட்டி மாமூல் வசூல் செய்வதாக ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. இவற்றுக்கும் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் துணை நிற்பதாக கூறப்படுகிறது.

இப்படி பல்வேறு விரும்பத்தகாத செயல்களை வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் தெரிந்தே தைரியமாக குற்றவாளிகளுடன் கைகோர்த்துக் கொண்டு இணைந்து செயல்படுகிறார் இந்த காவல்துறையில் உள்ள கருப்பு ஆடு சிலம்பரசன். இதுகுறித்து செய்திகள் வெளிவந்தால் அந்த பத்திரிகையின் செய்தி வெளியீட்டாளர் மற்றும் அந்த செய்தியாளர், அந்த செய்தி ஆசிரியர் உள்ளிட்டோருக்கு 4 நோட்டீஸ் அனுப்பி அவர்களை மிரட்ட பார்க்கிறார் இந்த ஜெகஜால கில்லாடி உதவி ஆய்வாளர் சிலம்பரசன் என்று சொன்னால் அது மிகையாகாது.

இவ்வாறு செய்தித்துறையின் குரல் வளையை நெரிக்க பார்க்கிறார், அத்துடன் பத்திரிகை சுதந்திரத்தையும் பறிக்க பார்க்கிறார் இந்த காவல்துறையில் உள்ள கருப்பு ஆடு உதவி ஆய்வாளர் சிலம்பரசன். அத்துடன் இந்த காவல் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தனது அடியாட்களை வைத்து போன் போட்டு அந்த பத்திரிகை அலுவலகத்தில் உள்ள ஆசிரியரை மிரட்டுவது என்று இல்லாத பணிகளில் எல்லாம் இவர் ஈடுபட்டு வருகிறார்.

இவ்வாறு ஒரு அநியாயம் கணியம்பாடியில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் கைகட்டி வேடிக்கை பார்க்கிறாரா? அல்லது நடவடிக்கை எடுப்பாரா?என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செய்தி ஆசிரியர் ச வாசுதேவன் 

CATEGORIES
TAGS