செம்பனார்கோயில் அருகே நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் அருகே உள்ள கிடாரங்கொண்டான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் மயிலாடுதுறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கிடங்கிலிருந்து தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள 90 ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரம், பொருட்களின் இருப்பு, நகர்வு பணி ஆகியன குறித்து ஆய்வு செய்தார். மேலும், மாவட்ட வழங்கல் அலுவலர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமான ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தரமான ரேஷன் பொருட்கள் வழங்க வட்ட வழங்கல் அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் குறித்து ஏதேனும் புகார் இருந்தால் வட்ட வழங்கல் அலுவலர்களிடம் மனுவாக அளிக்கலாம். அதனை ஏற்று புகார் தொடர்பாக ஆய்வு செய்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த மாதத்திற்கான ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் ரேஷன் பொருட்களின் நகர்வு பணியை எதிர்வரும் 18-ஆம் தேதிக்குள் முடிக்க தரக்கட்டுப்பாட்டு அலுவலர் ராகவனிடம் அறிவுறுத்தினார். ஆய்வின்போது தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு, கிடங்கு உதவியாளர் மணிகண்டன், நகர்வு எழுத்தர்கள் பிரதீப் குமார், வடிவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
