‘தமிழகத்தின் வளர்ச்சியை மத்திய அரசால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை’ – அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் பரபரப்பு பேட்டி.

மாநிலங்களின் ஒப்புதலுடனே உணவுப்பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் தற்போதைய அரசியல், நிதி சூழல் குறித்து தனது யூடியூப் சேனலில் பேட்டியளித்துள்ளார் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். அந்த பேட்டியின் முழு வடிவம் இதோ.
பாஜக அரசு 2014 ல் ஆட்சிக்கு வந்தபோது 9 ரூபாய் 40 காசுகள் இருந்த பெட்ரோல் வரியை 32 ரூபாய் 50 பைசாவாக உயர்த்தினார்கள். அதேபோல டீசலுக்கு 3 ரூபாய் 80 பைசாவாக இருந்த வரியை 31 ரூபாய் 50 பைசாவுக்கு உயர்த்தினார்கள். இதுபோல மிக அதிகமாக வரியை நம் நாட்டில் உயர்த்தியதே கிடையாது. அப்போதெல்லாம் எந்த மாநிலமும் இதுபோல வரியை உயர்த்தவில்லை. தடாலடியாக 3 அல்லது 4 மடங்கு வரியை உயர்த்திவிட்டு இப்போது தேர்தலுக்காக கொஞ்சம் குறைத்துவிட்டு எங்களை குறைக்க சொன்னால் எங்களால் முடியாது. மத்திய அரசு சொல்லும்போதெல்லாம் மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்றால் இது ஜனநாயகமா?
நாட்டிலேயே முதல் முறையாக 2021 ஆகஸ்டில் 3 ரூபாய் பெட்ரோல் விலையை நாங்கள்தான் குறைத்தோம். அதன்பின்னர் மத்திய அரசு வரியை குறைத்தபோது மாநிலத்துக்குமான வரி குறைந்த காரணத்தால் பெட்ரோலுக்கு ஒரு லிட்டருக்கு 1ரூபாய் 95 இழப்பு ஏற்பட்டது. இதனால் பெட்ரோலுக்கு மட்டும் இதுவரை 4 ரூபாய் 95 காசுகள் மாநில அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல டீசலுக்கு மத்திய அரசு குறைத்தததால் 1.76பைசா வரியை இழந்துள்ளோம். எனவே பெட்ரோல், டீசல் வாக்குறுதியில் 90 சதவீதம் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். தமிழகத்தில் இதுவரை இருந்த அரசுகளில் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு அதிகமாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிதான்.
இன்றைய பிரதமராக இருக்கும் மோடி, 13 ஆண்டுகள் குஜராத்தின் முதல்வராக இருந்தார். அப்போது மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கக்கூடாது என்று அவர் சொன்ன கருத்துகளை நான் இங்கே பின்பற்றுகிறேன். ஆனால் இப்போது மாநில அரசுகளை துன்புறுத்தி, ஒரம்கட்டி எல்லாமே நாட்டிற்கு அரசர் போல இருந்து டெல்லியிலிருந்து எடுக்கும் முடிவுகளைத் திணிக்கப் பார்க்கிறார்கள். பள்ளிக்கல்வி மாநிலப்பட்டியலில் உள்ளது,
ஆனால் அதில் தலையிடுகிறார்கள். விவசாயம் மாநிலப்பட்டியலில் உள்ளது, அதில் மூன்று சட்டங்களை கொண்டு வருகிறார்கள். அணைகள் சிறு துறைமுகங்கள் மாநிலப்பட்டியலில் உள்ளது, அதிலும் மத்திய அரசு தலையிடுகிறது. இவ்வாறு மாநில அரசுகளை அடிமைப்படுத்தி நாட்டில் ஒரே அரசாக தாங்கள் மட்டுமே இருப்பதுபோல மத்திய அரசு செயல்படுகிறது.
நமது வரியாக 1 ரூபாய் சென்றால் அது திரும்ப நமக்கு 35 பைசா கூட வருவதில்லை. எதோ ஒரு முதலாளி டெல்லியில் அமர்ந்துகொண்டு எல்லாவற்றையும் அவர்களே தீர்மானிப்பதைப் போலவும், நாம் அவர்களிடம் அடிமையாக கெஞ்சி நிற்கவேண்டும் எனவும் விரும்புகிறார்கள். நமது வருமானத்தை எப்படி குறைப்பது, அமுக்குவது, நிறுத்துவது என்று பார்க்கிறார்கள். இப்படி எல்லாவற்றையும் கட்டுப்படுத்தப்பார்க்கும் மத்திய அரசால் ஒரு விஷயத்தை ஜீரணிக்கவே முடியவில்லை.
தமிழக அரசின் நிதி மேலாண்மை மற்றும் ரிசல்ட் மத்திய அரசைவிட சிறப்பாக உள்ளது. இந்த ஆண்டு மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை 7 சதவீதம். ஆனால் தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை கிட்டத்திட்ட 3.5 சதவீதம். இப்போது நாட்டில் இருக்கும் பணவீக்கம் தேசிய அளவில் 8 சதவீதம், ஆனால் தமிழகத்தின் பணவீக்கம் 5 சதவீதம். எனவே இதனை அவர்களால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. கடந்த ஆண்டைவிடவும் இந்த இந்த ஆண்டில் தமிழகத்தின் வளர்ச்சி மிகச் சிறப்பாக உள்ளது. எனவே தமிழகத்தின் வளர்ச்சியை அமுக்கவேண்டும் என்றே, இதுபோல தமிழ்நாட்டை குறி வைக்கிறார்கள்.