BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்ட வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்ட சென்னை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நேற்று முன்தினம் ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் சென்னை உள்பட சில இடங்களில் கள்ள ஓட்டு தொடர்பான புகார்களால் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

மேலும் வாக்குப்பதிவின் போது முறைகேடு, இயந்திர கோளாறு உள்ளிட்ட காரணங்களால் சென்னை, மதுரை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, தமிழகத்தில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது. சென்னை மாநகராட்சியில் 2 வாக்குச்சாவடிகள்; திருமங்கலம் நகராட்சியில் 1 வாக்குச்சாவடி, ஜெயங்கொண்டம் நகராட்சியில் 2 வாக்குச்சாவடி, திருவண்ணாமலை நகராட்சியில் 2 வாக்குச்சாவடி என மொத்தம் 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறுவாக்குப்பதிவு நடக்க உள்ளது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். மறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்படும்.

மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகள் இன்றைய தினமே வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு பாதுகாவல் அறைகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட உள்ளன. இந்த வாக்குகளும் நாளை எண்ணப்படும்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )