தலைப்பு செய்திகள்
பள்ளி மாணவி கன்னத்தை கிள்ளிய கணித ஆசிரியர் கைது!
தருமபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சி அருகே லிங்கநாயக்கனஅள்ளி என்ற கிராமம் உள்ளது. விவசாய மக்கள் அதிகம் வசிக்கும் இந்த கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் சேரன்(50) என்பவர் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணக்கர்களுக்கு கணிதம் பாடம் நடத்தி வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 9-ம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவி கணக்கு தவறாக போட்டுவிட்டார் என்பதற்காக கன்னத்தில் கிள்ளியதோடு முதுகில் தட்டியுள்ளார்.
சக மாணவர்கள் முன்னிலையில் தனக்கு நேர்ந்த இந்த பிரச்சனையை மாணவி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், கடத்தூர் காவல்நிலையத்தில் ஆசிரியர் சேரன் மீது புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிரியரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், உண்மை எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆசிரியர் சேரனை கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ தடுப்பு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.