மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு வசதிகள் அடங்கிய சீமாங் சென்டர் அமைப்பதற்கு ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் கம்பம் அரசு மருத்துவமனையில் அடிக்கல் நாட்டும் விழா.

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளதால் தினசரி ஏராளமான உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
பெரும்பாலான நோய்களுக்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனையில் 170க்கும் மேற்பட்ட படுக்கை வசதியும் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கும் ‘சீமாங்’ சென்டர் வசதியும் உள்ளது.
நாள்தோறும் சுமார் 200க்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப்பட்டு வரும் நிலையில் கம்பம் சுற்று வட்டார பகுதி மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் ஏராளமான கர்ப்பிணிப் பெண்கள் நாள்தோறும் கம்பம் அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்து மருத்துவம் பார்த்து செல்வதால்
பிரத்யோகமாக மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு வளாக கட்டிடம் புதிதாக கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த கோரிக்கையின் அடிப்படையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு வசதிகள் அடங்கிய சீமாங் சென்டர் புதிதாக அமைப்பதற்கு NHM திட்டத்தின் கீழ் 10 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் தலைமையிலும்,
கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் மற்றும் கம்பம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பொன்னரசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது .