மாணவர்களிடையே நிதி சார் கல்வியறிவு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் நோக்கில் வினாடி வினா போட்டி..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி அவர்களின் வழிகாட்டுதலின்படி மாணவர்களிடையே நிதி சார் கல்வியறிவு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கியால் அனைத்து இந்திய அளவிலான வினாடி வினா போட்டி ஒன்றிய அளவில் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் பாரத வங்கி முதன்மை மேலாளர் இராஜராஜன் தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினார். அரியலூர் மாவட்ட முன்னோடி வங்கி முதன்மை மேலாளர் லியோனில் பெனிடிக் முன்னிலை வகித்தார். பள்ளி துணை ஆய்வாளர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார்.
வினாடி வினா போட்டியில் அரசு மேல்நிலை,உயர்நிலை மற்றும் நடுநிலை பள்ளிகளென என 18 பள்ளிகளிலிருந்து 8,9,10 ஆம் வகுப்பு பயிலும் 36 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் செங்குந்தபுரம் அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் லோகேஷ் சுவாதி ஆகியோர் முதலிடத்தையும், அய்யப்ப நாயக்கன் பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அக்ஷயா ராகுல் ஆகியோர் இரண்டாம் இடத்திலும், கல்லாத்தூர் தண்டலை அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் லெனின் அபூர்வநாதன் அனுஷ்கா ஆகியோர் மூன்றாம் இடத்திலும் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஜெயா பாராட்டு சான்று மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. ஜெயங்கொண்டம் அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பிரகாஷ், சின்ன வளையம் அரசினர் உயர்நிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ராஜதுரை ஆகியோர் போட்டி நடுவர்களாக செயல்பட்டனர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக ஜெயங்கொண்டம் பாரத வங்கி உதவி மேலாளர் மீனா , புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன் ஆகியோர் செயல்பட்டனர்.
ஒன்றிய அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர். ஜெயங்கொண்டம் பாரத வங்கி துணை மேலாளர் லில்லி நன்றி கூறினார்.