மாநகராட்சியில் நிரந்தர பணியிடங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர் மாநகராட்சி, நகராட்சியில் நிரந்த பணியிடங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.மதிவாணன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்றோர் நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகி சிவசுப்பிரமணியன்,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ரெங்கசாமி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் டி.ரவிச்சந்திரன், மருத்துவத்துறை ஆய்வக தொழில்நுட்ப சங்க மாநில பொதுச் செயலாளர் எம்.என்.சாந்தாராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், மாநகராட்சி, நகராட்சிகளில் துப்புரணி பணியாளர்கள், பில் கலெக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு நிரந்தர பணியிடங்களை தனியார் மயமாக்கும் அரசாணை எண் 152 ஐ ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.