அக்கரைப்பட்டி ஆதி திராவிடர் காலனிக்கு, சாலை வசதி கேட்டு, ஆத்தூர் தாலுகா அலுவலகம் திடீர் முற்றுகை பரபரப்பு.
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் அக்கரைப்பட்டி ஆதிதிராவிடர் காலனிக்கு சாலை வசதி கேட்டு, அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட சுமார் 100 பேர் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தை திங்கள்கிழமை திடீர் முற்றுவிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூர், ப பூஞ்சோலை அக்கரைப்பட்டி, மல்லையாபுரம் பகுதிகளை சேர்ந்த ஆதி திராவிடர் பொதுமக்களுக்கு, அக்கரைப்பட்டியில் இருந்து மல்லையாபுரம் செல்லும் வழியில், கடந்த 1999, 2003, 2010 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் சுமார் 150 க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனை பட்டா தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது.
தற்போது, இந்த ஆதிதிராவிடர் காலனியில் 50-க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு சாலை வசதி ஏற்படுத்த, ஒன்றிய கவுன்சில் நிதியில், சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
ஆனால், அந்த பகுதி சேர்ந்த 2 தனி நபர்கள், தங்களுக்கு சொந்தமான இடத்தில் சாலை வசதி அமைக்க கூடாது என, தடுத்து பணியை நிறுத்திவிட்டனர். இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று திங்கள்கிழமை திடீரென, ஆத்தூர் தாலுகா அலுவலகத்தை, அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தன் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர், ஆத்தூர் துணை வட்டாட்சியர் ஜமுனாவிடம் தங்கள் ஆதி திராவிட காலனி பகுதிக்கு செல்ல சாலை வசதி அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை மனு அளித்தனர்.
அதனைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் நாளை மறுநாள் புதன்கிழமை நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து முற்றுகைப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஆத்தூர் தாலுகா அலுவலகம் திடீர் முற்றுகை போராட்டத்தால், இந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.