BREAKING NEWS

அணைக்கரை கொள்ளிடத்தில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் நீரேற்ற நிலைய பாலம் வலுவிழந்து இடிந்து விழுந்தது.

அணைக்கரை கொள்ளிடத்தில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் நீரேற்ற நிலைய பாலம் வலுவிழந்து இடிந்து விழுந்தது.

திருப்பனந்தாள் அருகே வாண்டையார் இருப்பு கிராமம் அமைந்துள்ளது. இங்கு கொள்ளிடம் ஆற்றில் வேளாங்கண்ணி கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு நாகை மாவட்டத்திற்கு குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு தினசரி பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்திசெய்யப்பட்டு வருகிறது.

 

நாகை மாவட்டம் கடற்கரை பகுதி என்பதால் அங்கு நிலத்தடி நீர் உப்பு தண்ணீராக இருப்பதால் இங்கிருந்து வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 2006-ம் ஆண்டு சுமார் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு குடிதண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.இதனால் சுமார் 587-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

 

இதற்காக அணைக்கரை கொள்ளிட பகுதியில் அம்மையப்பன் பகுதி, வாண்டையார் இருப்பு பகுதி என இரண்டு இடங்களில் ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு ராட்சத மோட்டார்கள் மூலம் 24 மணி நேரமும் தண்ணீர் இறைத்து வருகின்றனர்.

 

 

ஒவ்வொரு நீரேற்று நிலையங்களிலும் 3 மணி நேரத்திற்கு ஒரு தடவை அருகிலுள்ள ராட்சத மோட்டார் நிறுத்தப்படும். இதற்காக 3 பணியாளர்கள் ஷிப்ட் முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் திருப்பனந்தாள் அருகே அணைக்கரை வாண்டையார் இருப்பு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் செல்லும் பாலத்தில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழை காரணமாக கடந்த ஒரு மாதமாக கொள்ளிடம் ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

 

இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவிற்கு மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவு 120 அடியை எட்டியதால் கொள்ளிடத்தில் அதிகபட்சமாக 2 லட்சம் கன அடி வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை பொதுப்பணித் துறையால் விடுக்கப்பட்டது.

 

இதற்கிடையில் வெள்ள நீரால் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த வேளாங்கண்ணி கூட்டுக் குடிநீர் குழாய் திட்ட கட்டுமானத்தில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. பாலத்திற்கு கீழே ஆற்றில் இருந்து அமைக்கப்பட்ட தாங்கு கட்டையில் அரிப்பு ஏற்பட்டு மண்ணில் உள்வாங்கியுள்ளது.

 

இதன் காரணமாக குடிநீர் குழாய் தாங்கும் சிறிய பாலம் சேதமடைந்துள்ளது. இதில் சுமார் 50 அடி நீளத்திற்கு குடிநீர் குழாய் மற்றும் அதை ஒட்டிய கட்டுமான சிமெண்ட் கட்டைகள் நேற்று இரவு சேதம் அடைந்து கீழே விழுந்துள்ளது. 

 

ஆனால் அதே நேரத்தில் குடிநீர் குழாய்க்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. லேசான குடிநீர் கசிவு மட்டும் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், முத்துப்பேட்டை மற்றும் வழியில் உள்ள பேரூராட்சி, கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

குறிப்பாக குடிநீர் சேகரிப்பு கிணற்றிலிருந்து மோட்டார் மூலம் வெளியேற்றப்படும் குடிநீரில் கசிவு ஏற்பட்டுள்ளதால் முழுமையான தண்ணீர் குழாய் மூலம் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர்.

 

எனவே குடிநீர் உநியோகத்தை நிறுத்திவிட்டு பாலம் மற்றும் குடிநீர் குழாயை சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும். மேலும் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள பாலம் தாங்கு கட்டைகளின் ஸ்திரத்தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )