அரசின் அனைத்து திட்டங்களும் கடைகோடி மக்களுக்கும் சென்றடைய அரசு அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் பணிபுரிய வேண்டும்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

அரசின் அனைத்து திட்டங்களும் கடைகோடி மக்களுக்கும் சென்றடைய அரசு அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் பணிபுரிய வேண்டும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள், சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா, சிறப்பு திட்டஅமலாக்கத்துறை செயலாளர் மரு.தரேஸ் அகமது, ஆகியோர் முன்னிலையில் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் அளிக்கும் ஒவ்வொரு கோரிக்கை மனுவும் அவர்களது வாழ்வியல் பிரச்சனையாகும். எனவே, அதனை உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டும்”
என தெரிவிப்பார்கள். ஒவ்வொரு துறை அரசு அலுவலர்களும் தங்கள் துறைக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை உரிய காலத்திற்குள் முடித்து பொதுமக்களுக்கு உதவிட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக நமது திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட திட்டங்களை மாண்புமிகு தமிழக முதலமைச்சர், செயல்படுத்தியுள்ளார்கள். “அனைவருக்கும் எல்லாமும்” என்பதே திராவிட மாடல் ஆட்சியின் இலக்கு.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் நாம் செயல்படுத்தியுள்ள திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இத்திட்டத்திற்கென சுமார் ரூ.7000 கோடியை தமிழ்நாடு முதலமைச்சர் ஒதுக்கீடு
செய்துள்ளார்கள். இத்திட்டத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்தும் அரசு அலுவலர்களாகிய நீங்கள், தகுதியுள்ள எந்தவொரு பயனாளியையும் விட்டுவிடாமல் முழுமையாக செயல்படுத்திட வேண்டும்.
இத்திட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியிலும், மகளிர் மத்தியிலும் நல்ல எதிர்பார்ப்பும் வரவேற்பும் உள்ளது. நீங்கள் அனைவரும் இத்திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்திட வேண்டும். தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும், கடைகோடி மக்களுக்கும் சென்று சேர்த்திட அரசு அலுவலர்கள் இவ்வரசிற்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனதுநன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக, பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், திட்ட முன்னேற்றம் குறித்தும், நிலுவைக்கான காரணங்கள் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். நிலுவையில் உள்ள பணிகளை உரிய காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு துறை அலுவலர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.
இவ்வாய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ். மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம்.க.கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன். உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் மற்றும் அனைத்து அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர் .