அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கலைத் திருவிழாவை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்.

தேனி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கலைத் திருவிழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார். தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ மாணவியர்களின் கலைத்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட அரசு உதவி பெறும் பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கலைப் பண்பாட்டு தொடர்பான போட்டிகள் இன்று துவங்கியது. முதல் நாள் நிகழ்வினை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
நான்கு நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் நாட்டுப்புற கலைகளான வில்லுப்பாட்டு, கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற நடன நிகழ்ச்சிகள், நாடகங்கள் ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் என பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
இதில் சிறப்பாக செயல்படும் மாணவ மாணவியர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.