அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி? – காவலர் மீது புகார்! எஸ்பி அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் குவிந்த புகார்கள்!

வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் சைபர் கிரைம் ஏடிஎஸ்பி கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.
அப்போது, அரக்கோணம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ரமேஷ் குமார் என்பவர், தனது மகளுக்கு மின்வாரிய அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு வேலையையும் வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாக பழைய காட்பாடியை சேர்ந்த விஜயா(45) என்ற பெண் புகார் அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட ஏடிஎஸ்பி, விசாரித்து உடனடியாக பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க காட்பாடி இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார்.
அதேபோல,அணைக்கட்டு அடுத்த கீழ் கிருஷ்ணா புரத்தை சேர்ந்த கோமதி தனது தாய் மாமன் நான் சுரேஷ் என்பவர் வெளிநாடு செல்ல 7 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்த நிலையில் பணத்தை திரும்பி தராமல் ஏமாற்றி வருகிறார் என புகார் அளித்தார்.
பேரணாம்பட்டு அடுத்த சாக்கர் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவர் கொடுத்த மனுவில்,நான் வீடு வேலை செய்து வருகிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த டீக்கா ராமன் என்பவரிடம் ரூ 50,000 கடனாக பெற்றேன். மாதம் தோறும் ரூ 10,000 வட்டியாக கட்டி வருகிறேன். ஆனால் டீக்காராமல் இரண்டு லட்சம் தர வேண்டும் என அடியாட்களை வைத்து மிரட்டுவதாக புகார் தெரிவித்தார்.
மனு அளிக்க வந்திருந்த அனைவரிடமும் மனுவைப் பெற்றுக் கொண்ட ஏடிஎஸ்பி கோடீஸ்வரன் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.