அரியமங்கலத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் போதை மாத்திரைகளை விற்ற அண்ணன் தம் உட்பட 3 பேர் கைது – 970 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்சி அரியமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் சுந்தர்ராஜன் இவர் அரியமங்கலம் சாமிநாதன் தெருவில் உள்ள நாகம்மாள் கோவில் அருகில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு 3 பேர் மறைவான இடத்தில் அமர்ந்து போதை மாத்திரைகளை குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் விற்று கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சுந்தர்ராஜன் அரியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பெயரில் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் கார்த்திகா தலைமையிலான போலீசார் போதை மாத்திரைகளை விற்பனை செய்த அரியமங்கலம் காமராஜர் நகர் சாமிநாதன் தெருவை சேர்ந்த கதிரேசன் என்கிற கதிர் வயது (21), திருவெறும்பூர் செல்வபுரம் 2வது தெருவை சேர்ந்த தினகரன் என்கிற தீனா (24), இவரது தம்பி கிரண் கிறிஸ்டோபர் (23) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் விற்பதற்காக வைத்திருந்த 970 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேர் மீதும் மருந்து மற்றும் அழகு சாதன சட்டம், குழந்தைகள் மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
