அரியமங்கலத்தில் நேற்று இரவு மாருதி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,
திருச்சி அரியமங்கலம் ரயில் நகர் பகுதியில் வசித்து வருபவர் அலெக்சாண்டர் இவர் தனது குடும்பத்தினருடன் மாருதி வேனில் நேற்று மாலை துணிகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக பஜார் வரை சென்று விட்டு பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்டு திரும்ப வீட்டிற்கு வந்து துணிகள் மற்றும் பொருட்களை வைத்துவிட்டு. இரவு 10 மணியளவில் டிபன் சாப்பிடுவதற்காக அருகிலுள்ள ஹோட்டலுக்கு மாருதி வேனை எடுத்துள்ளார்.
வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்றவுடன் மாருதி வேனின் பின்புறத்தில் தீ பொரி கிளம்பியுள்ளது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டனர். உடனடியாக காரில் இருந்த அலெக்சாண்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் வேனில் இருந்து இறங்கி சிறிது தூரம் சென்று நின்று விட்டனர். பின்னர் மாருதி வேன் முழுவதும் தீ பற்றி மளமளவென எரிந்தது.
இச்சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் கண்டோன்மென்ட் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் நாகராஜன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து தீயை அணைத்தனர். இச்சம்பவம் அறிந்த அரியமங்கலம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர்.
தீப்பற்றி எரிந்ததில் மாருதி வேன் முழுவதும் எரிந்து சாம்பலானது இந்த மாருதி வேன் எரிவாயு சிலிண்டர் பொருத்தப்பட்ட வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.