அவர் மீது எனக்கு மரியாதை உண்டு.. விஜயகாந்தை நேரில் சந்தித்த அன்புமணி பேச்சு.

கேப்டன் விஜயகாந்த் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய மரியாதை இருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற அன்புமணி இவ்வாறு கூறினார்.
கேப்டன் விஜயகாந்த் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய மரியாதை இருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற அன்புமணி இவ்வாறு கூறினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஒருமனதாக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக பொறுப்பேற்றுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுவருகிறார். அந்த வரிசையில் இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் இல்லத்தில் அவரை மரியாதை நிமித்தமாக அன்புமணி ராமதாஸ் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே மூர்த்தி, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் பார்த்தசாரதி, விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இச்சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் அரசியலில் தைரியமாக மக்களைத் திரட்டி அரசியல் செய்து வருகிறார். அதனடிப்படையில் கேப்டன் விஜயகாந்த் அவர்களை இன்று நான் சந்தித்தேன். இது நட்பு ரீதியான ஒரு சந்திப்பு, எப்போதும் அவர் மீது எனக்கு தனிப்பட்டமுறையில் மரியாதை உண்டு. அவர் மகன் மூலமாக அவர் என்னிடம் பேசினார், வரும் காலங்களில் அரசியல் சூழ்நிலை மாறும், அதற்கேற்றாற்போல் எங்கள் அரசியல் பயணம் இருக்கும் என்றார்.
தமிழ்நாட்டில் உள்ள கல்வித்தரம் மேலும் உயர வேண்டும், பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத சூழ்நிலை உள்ளது. அந்த நிலையை மாற்ற வேண்டும். தற்போது கல்வியின் அடித்தளமே சரியாக இல்லை, நீட் தேர்வில் மாணவர்களுக்கு நம்பிக்கை இல்லை அதனால் தான் தற்கொலை நடக்கிறது மாணவர்கள் மத்தியில் போட்டி போடும் தன்மை இல்லை, அதுமட்டுமின்றி கல்வி வணிக மையமாக மாறிக்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தரமான கல்வியையும் நம்பிக்கையையும் அளிக்கும் வகையில் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.