ஆலங்காயம் அருகே நில தகராரு காரணமாக விவசாயி குடும்பத்தினரை வீட்டுக்குள் பூட்டி சிறை வைத்து மரங்களை வெட்டி சாய்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கத்தி இரும்பு ராடு உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களால் தாக்க வந்ததால் 100 என்ற எண்ணுக்கு கால் செய்து தப்பித்ததாக
விவசாய குடும்பத்தினர் பரபரப்பு பேட்டி
நில அளவீடு செய்வதில் வருவாய்த் துறையினரின் குளறுபடியே காரணம் என விவசாயி குற்றச்சாட்டு.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பூங்குளம் , செட்டிவட்டம் பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடேசனுக்கும் பக்கத்து வீடான முனியன் குடும்பத்தினருக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலத்தில் வழி சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் இருவரும் நிலம் மற்றும் வழியினை சர்வே செய்ய வருவாய்த் துறையினருக்கு கோரிக்கை வைத்திருந்தனர். வருவாய் துறையினர் சர்வே செய்ததில் ஏற்பட்ட குளறுபடியால் பிரச்சனை முடிவுக்கு வராமல் இது தொடர்பாக வெங்கடேசனுக்கும்,
முனியன் குடும்பத்தாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் முனியன் மற்றும் அவருக்கு ஆதரவாக 10 க்கும் மேற்பட்டோர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வெங்கடேசனின் வீட்டிற்கு சென்று வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி இருவரையும் வீட்டிற்குள் வைத்து வீட்டை பூட்டி சிறை வைத்து வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த தென்னை மற்றும் முருங்கை மரங்களை வெட்டி சாய்த்தும் வீட்டிற்குள் செல்ல வழி யில்லாமல் தடுப்பு வேலி அமைத்ததாகவும்,
மேலும் வழி தொடர்பாக மேலும் பிரச்சினை செய்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.பின்னர் வெங்கடேசன் உடனடியாக தங்களை காப்பாற்றி கொள்ள காவல்துறை 100 என்ற எண்ணுக்கு போன் செய்து தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்காயம் போலீசார் வீட்டிற்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த வெங்கடேசன் மற்றும் அவரது மனைவியை மீட்டுள்ளனர். இது சம்பந்தமாக விவசாயி வெங்கடேசன் ஆலங்காயம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.