BREAKING NEWS

ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் ஏடிஜிபி ஜெயராம், எம்எல்ஏ ஜெகன்மூர்த்தி.. ஒரே இடத்தில் 12 மணி நேரம் விசாரணைக்கு

ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் ஏடிஜிபி ஜெயராம், எம்எல்ஏ ஜெகன்மூர்த்தி.. ஒரே இடத்தில் 12 மணி நேரம் விசாரணைக்கு

ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் ஏடிஜிபி ஜெயராம், எம்எல்ஏ ஜெகன்மூர்த்தி.. ஒரே இடத்தில் 12 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தல்”

ஆள் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி. குப்பம் தனி தொகுதி எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி, தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குனர் (ஏடிஜிபி) ஜெயராம் ஆகியோரிடம் 12 மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருவரையும் ஒரே இடத்தில் வைத்து திருத்தணி உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் தமிழரசி தலைமையில், திருவேற்காடு போலீசார் விசாரிக்கிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம், களாம்பாக்கத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 44). இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் தனுஷ் (வயது 23). இவர் இன்ஸ்டாகிராம் மூலம் தேனியைச் சேர்ந்த (21 வயது) பெண்ணுடன் பழகியுள்ளார்.

நாளடைவில் இது காதலாக மாறியதாக தெரிகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் காதலில் உறுதியாக இருந்தனர். இவர்களது காதல் அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதனால் அவருடைய தந்தை வனராஜ் (வயது 55) தனது மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த எதிர்ப்பால் அந்த பெண்ணை திருவள்ளூருக்கு அழைத்து வந்த தனுஷ், ஏப்ரல் 15ஆம் தேதியன்று பதிவு திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் வேறு ஒரு இடத்தில் வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இந்த நிலையில் மகளை எப்படியாவது மீட்க பெண்ணின் தந்தை வனராஜ் தீவிரமாக இருந்தார்.

அதன்படி மதுரையைச் சேர்ந்த மகேஸ்வரி (வயது 55) என்ற பெண்ணை அணுகியுள்ளார். மகேஸ்வரிக்கு திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பிரபலங்கள், வழக்கறிஞர்களை தெரியும் என்பதால் எப்படியும் மகளை மீட்கலாம் என உறுதி கொடுத்துள்ளார்.

பூந்தமல்லி ஆண்டரசன்பேட்டையைச் சேர்ந்தவரும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான கே.வி. குப்பம் தனி தொகுதி எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தியிடம் சொல்லி மகளை மீட்கும் முயற்சியில் வனராஜ் தீவிரப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் வனராஜ், தனது உறவினர்களான மணிகண்டன் (46), கணேசன் (வயது 47) ஆகியோருடன் வாகனங்களில் ஆட்களை திரட்டி கொண்டு திருவள்ளூருக்கு சென்றாராம்.

பூவை ஜெகன்மூர்த்தியை சந்தித்து விஷயத்தை சொன்னதாக தெரிகிறது. அப்போது அவரது ஆலோசனைபடி, பூந்தமல்லியை அடுத்த துத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார் (வயது 35) என்பவரை சந்தித்தனராம். பின்னர், கடந்த 6ஆம் தேதியன்று நள்ளிரவு களாம்பாக்கத்திற்கு சென்று, அங்கு தனுஷை தேடினராம்.

அங்கு அவர் இல்லை என்பதால் லட்சுமியை கேட்டுள்ளனர். அவரும் தனக்கு தெரியாது என சொன்னதால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், தனுஷின் 17 வயது மைனர் சிறுவனை கடத்திச் சென்றது. தாய் லட்சுமி எவ்வளவோ தடுத்தும் அவர்கள் மைனர் சிறுவனை கடத்திச் சென்றதை அடுத்து காவல் துறைக்கு தொலைபேசி வாயிலாக புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் மைனர் சிறுவனை போலீஸார் தேடுவதை அறிந்த வனராஜ் உள்ளிட்டோர், அந்த சிறுவனை அழைத்து வந்து அவன் வசிக்கும் தெருவில் விட்டுச் சென்றுவிட்டு தப்பியதாம். இந்த கடத்தல் தொடர்பாக வனராஜ், மணிகண்டன், கணேசன், மகேஸ்வரி, சரத்குமார் ஆகிய 5 பேரை இந்த கடத்தல் வழக்கில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்துள்ளனர்.

இந்த கடத்தலில் பூவை ஜெகன்மூர்த்திக்கும் தொடர்பிருப்பதாக கருதிய திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள், அவருடைய வீட்டில் சோதனை செய்த போது ஜெகன்மூர்த்தி அங்கு இல்லை என்பதால் அவரை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார்.

 

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, நேரில் ஆஜரானால்தான் விசாரிப்போம் என நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து பூவை ஜெகன்மூர்த்தி ஆஜரானார். அப்போது கட்ட பஞ்சாயத்து செய்வதற்காகத்தான் உங்களை மக்கள் எம்எல்ஏவாக தேர்வு செய்தார்களா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

 

இந்த நிலையில் கடத்தலில் ஏடிஜிபி ஜெயராமுக்கு தொடர்பிருப்பதாக சொன்னதை அடுத்து அவரை நீதிபதி வேல்முருகன், கைது செய்ய உத்தரவிட்டார். இந்த நிலையில் திருத்தணி உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து தமிழ்நாடு காவல்துறையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து அவரை திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு காவல் ஆய்வாளர் அறையில் வைத்து ஜெயராமிடமும், எஸ்ஐ அறையில் பூவை ஜெகன்மூர்த்தியிடமும் 12 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்படுகிறது. இதனிடையே ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்

CATEGORIES
TAGS