இந்தியாவிலே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கி அமைச்சர் காந்தி பேச்சு

ராணிப்பேட்டையில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்விழா பொதுக்கூட்டம்.
ராணிப்பேட்டை மாவட்ட மாணவரணி மற்றும் நகர திமுக இணைந்து ராணிப்பேட்டை முத்துக்கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா முன்னிட்டு ரூ.10லட்சம் மதிப்பீட்டில் 2,100 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பூங்காவனம் வரவேற்றார். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., ஆகியோர் கலந்து கொண்டு நலதிட்ட உதவிகள் வழங்கி பேசினார்கள்.
கூட்டத்தில் தமிழக அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது:-
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவின் நம்பர்.1 முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்தியாவில் 7 மாநிலத்திற்கு தான் மித்ரா பார்க் திட்டம் வழங்கியுள்ளனர்.அதில் ஒன்று தமிழ்நாடு. அதுவும் அந்த 7மாநிலத்தில் முதலில் தமிழ்நாட்டில் தான் அடிக்கல் நாட்ட போகிறார்கள்.
மத்திய மந்திரி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். விருதுநகர் மாவட்டத்தில் பி.எம். மித்ரா மெகா பார்க் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு பிரதமரை அழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் பிரதமரை அழைப்போம் என தெரிவித்தார்.
மக்களை தேடி மருத்துவம் திட்டம் இது தேர்தல் வாக்குறுதி இல்லை. உயிர் காக்கும் திட்டம் ஒரு விபத்து ஏற்பட்டால் அரசு மருத்துவ மனைக்கு போவோம் அவங்க உடனே சிகிச்சை பார்க்கமாட்டார்கள். போலீஸ் ரிப்போர்ட் வர வரைக்கும் காத்திருப்பாங்க இப்போ விபத்து ஏற்பட்டால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி 48 மணி நேரம் ஏற்படும் மருத்துவ செலவு ரூ.1லட்சம் வரை அரசு ஏற்றுக்கொள்கிறது.
இதுமட்டுமில்லாமல் விபத்து ஏற்பட்ட நபரை மருத்துவமனையில் சேர்க்கும் நபருக்கு ரூ.5000 வழங்குறாங்க. வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மிகவும் முக்கியமான ஒரு திட்டம்.அதிகமாக வேலைக்கு செல்வபவர்கள் பெண்கள் தான். அவர்களின் துயரம் போக்கவே அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கினார்.
குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.முதல்வரை உலகமே பாராட்டுகிறது. கைத்தறி துறையை ஒரு முன்மாதிரி துறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றிவிட்டார். இவ்வாறு அவர் பேசினார்.
பொதுக்கூட்டத்தில் மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் ஆர்.வினோத்காந்தி, ராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், மாவட்ட அவைத் தலைவர் சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் நகர துணை செயலாளர் துரைகுமார் நன்றி கூறினார்.
மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.