ஈரோட்டில் பழமை வாய்ந்த குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதற்கு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கனிராவுத்தர் குளம் பகுதியில மிகவும் பழமை வாய்ந்த குளம் ஒன்று உள்ளது. கீழ்பவானி கிளை வாய்க்காலில் இருந்து வரக்கூடிய கசிவு நீரானது நேரடியாக இந்ந குளத்திற்கு வந்தடைகிறது.
இதன் மூலம் குளத்தை சுற்றுயுள்ள பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கு தேவையான குடிநீர் பூர்த்தி செய்வதோடு, அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்கும் ஆதரமாக விளங்கி வருகிறது.
மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம், குளத்தை சுற்றி தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு, மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள் , மாசுக்கட்டுபாட்டு வாரியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், குளத்தில் உள்ள நீரின் டிடிஎஸ் அளவை ஆய்வு செய்ததில் , சரியான அளவில் உள்ளதாக தெரிவித்தனர். இருப்பினும் குளத்தின் பல்வேறு இடங்களில் இருந்து நீரை சேகரித்து ஆய்வுக்காக எடுத்து சென்ற அதிகாரிகள், மீன்கள் இறந்ததற்கு காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் குளத்திற்கு வரும் தண்ணீரை முறையாக பராமரிக்காமல், அலட்சியமாக இருப்பதால் தான், சாய சலவை தொழிற்சாலை கழிவுகள் குளத்தில் கலந்து மீன்கள் இறந்துவிட்டதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள், உரிய விசாரணை மேற்கொண்டு சுத்தமான நீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.