BREAKING NEWS

உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் உழவுக்கு வந்தனம் செய்வோம் என தைப்பொங்கல் விழாவை மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் உழவுக்கு வந்தனம் செய்வோம் என தைப்பொங்கல் விழாவை மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம்,

தைப்பொங்கலை வரவேற்க கிராம மக்கள் உற்சாகமாக மார்கழி இரவுகள் முழுவதும் இசை, நடனம் என ஒவ்வொரு கிராமமும் இசையால் களைகட்டி வருகிறது. உடுமலை கிராமங்களில், தேவராட்டம், சலகெருது மறித்தல், கும்மி என மார்கழி கொண்டாட்டங்கள் ‘களை’ கட்டியுள்ளன.

உயிரினங்களின் வாழ்வியலுக்கு ஆதாரமாக உள்ள இயற்கைக்கு, நன்றி சொல்லும் விழாவாக தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் சூரியனுக்கு நன்றி சொல்லும் வகையில், வீட்டு வாசற்படியில் கோலமிட்டு, புதுப்பானையில், புத்தரிசி, வெல்லம் இட்டு, பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.

 

அடுத்த நாள், உழவுக்கு உறுதுணையாக உள்ள மாடுகள், உழவுக்கருவிகளுக்கு நன்றி சொல்லும் விழாவாக, மாட்டுப்பொங்கல், உறவுகளோடு கொண்டாடும் காணும் பொங்கல் என, பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. உடுமலை சுற்றுப்புற கிராமங்களில், மாட்டுப் பொங்கல் முதல், மூன்று நாட்கள் சோமவாரபட்டி ஆல்கொண்டமால்
கோவில் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

 

கால்நடை செல்வம் செழிக்கவும், நோய், நொடிகள் அண்டாமல் பாதுகாக்கவும், கால்நடை காக்கும் கடவுளான, ஆல்கொண்டமாலுக்கு, பால் கொண்டு வந்து அபிேஷகம் செய்வது பல நுாறு ஆண்டு பாரம்பரிய வழக்கமாக உள்ளது.

 

 

சிறப்பாக கொண்டாடப்படும் தை மாதத்தை வரவேற்கும் வகையில், கிராமங்களில் மார்கழி மாதமே மக்கள் தயாராகி விடுகின்றனர். பெரியகோட்டை, ராஜாவூர், ஜல்லிபட்டி, வல்லக்குண்டாபுரம், கொடிங்கியம், லிங்கமாவூர், அம்மாபட்டி, மொடக்குப்பட்டி, பொட்டையம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் மார்கழி இரவுகளில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

 

அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை காக்கும் வகையிலும், கடும் குளிரையும் விரட்டும் வகையிலும், உருமி இசையோடு, ஊருக்கு பொதுவாக உள்ள காளை மாட்டுடன் விளையாடும், சலகெருது மறித்தல் விளையாட்டில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர்.இரு குச்சிகளை வைத்துக்கொண்டு, இசைக்கு ஏற்ப, சலங்கை கட்டிக்கொண்டு, காளையும், இளைஞர்கள், சிறுவர்கள் நடனமாடுகின்றனர். கால்நடைகளோடு, இணைந்த வாழ்வியலை உணர்த்துகிறது.
தேவராட்டம்

பாரம்பரியமான ஆட்டமாக தேவராட்டம் உள்ளது. உருமி இசைக்கு ஏற்ப, ஆண்கள், கைகளை யும், கால்களையும், உடலையும் அசைத்து, நடமாடுகின்றனர். முதலில், இறைவனுக்கு வணக்கம் செலுத்தி துவங்கும் ஆட்டத்திற்கு, உருமி இசை பக்கபலமாக உள்ளது.மெதுவாக துவங்கும், இசையும்,துவங்கும், இசையும், நடனமும், படிப்படியாக வேகமெடுத்து, 32 அடவுகள் என, இறுதியில் சாமியாட்டத்துடன் நிறைவடைகிறது.

 

 

கடும் குளிர் இரவும் அதிரும் வகையில், இசையும், ஆட்டமும் என ‘களை’ கட்டுகிறது. கும்மி பெண்கள், சிறுமிகள், ஒரு குழுவாக இணைந்து, கிராமிய பாடல்களுடன், உடலை அசைத்தும், கை ஓசையுடனும், சுற்றி, சுற்றி வந்து கும்மியடிக்கின்றனர். வாழ்வியல் நெறி, வரலாறு, பண்பாடுகளை விளக்கும் வகையில், பாடல்கள் அமைந்துள்ளன. தொடரும் பண்பாடு

பாரம்பரியமான இந்த விளையாட்டுக்கள் மூலம், கிராமத்திற்கு பொதுவான நாட்டு மாடுகளை பாதுகாப்பது மற்றும் அவற்றுடன் வித்தியாசமின்றி விளையாடும் கலாசாரம் வெளிப்படுகிறது. மார்கழி இரவுகள் கடும் குளிராக உள்ள நிலையில், உடலுக்கு வெப்பமேற்றும், இசை, நடனம் மற்றும் துாய காற்று என அற்புதமான உடல் நலன் காக்கும் வகையிலும் பாரம்பரிய நிகழ்ச்சிகளால் கிராமங்கள் ‘களை’ கட்டியுள்ளன.

மாட்டுப்பொங்கல் முடிந்ததும், கிராம மக்கள் இணைந்து, சலகெருதுடன், தேவராட்டம் ஆடி ஆல்கொண்டமால் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பல நுாறு ஆண்டுகளாக தொடரும் பாரம்பரிய நிகழ்வுகள் இன்றளவும் தொடர்கிறது.

 

செல்போன்களில் வரவல் உலகம் உள்ளங்கைக்குள் வந்து விட்டதாக கூறி முகநூல் வாட்ஸ்அப் ட்விட்டர் என மயங்கி கிடக்கும் இளைஞர்களின் மத்தியில் வீர விளையாட்டுக்கு இசை நடனத்துக்கும் இன்றளவும் முக்கியத்துவம் கொடுக்கும் உடுமலை பகுதி கிராம மக்களின் நமது பாரம்பரிய பண்பாட்டு கலைகளை காப்பாற்றுவது மகிழ்ச்சி தரக்கூடியதாக உள்ளது.

CATEGORIES
TAGS