உலகப் புகழ் பாலமேடு ஜல்லிக்கட்டு சிறந்த காளைகளுக்கு கார் காங்கேயம் பசு, மாடுபிடி வீரருக்கு இரு சக்கர வாகனம் பரிசு – மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டியினர் தகவல்.

மதுரை மாவட்டம்,
உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 16ஆம் தேதி திங்கள் கிழமை மாட்டுப்பொங்கல் அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மடத்து கமிட்டி தலைவர் மலைச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதிதங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கமிட்டி நிர்வாகிகள் உடனிருந்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் அளித்த பேட்டியில் மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டியினர் கூறியதாவது. வழக்கத்தை போலவே இந்த ஆண்டும் பாலமேடு ஜல்லிக்கட்டு சீரும் சிறப்புமாக எவ்வித தடையுமின்றி அரசு வழிகாட்டுதலுடன் நடைபெறும்.
சிறந்த காளைக்கு முதல் பரிசாக தமிழக முதல்வர் வழங்கும் ஒரு கார் மற்றும் இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சத்து 50ஆயிரம் மதிப்பில் கன்று குட்டியுடன் நாட்டு பசுமாடு வழங்க உள்ளோம். சிறந்த மாடுபிடி வீரருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் முதல் பரிசாக ஒரு பைக் மற்றும் இரண்டாம் பரிசாக சிறிய ரக பைக் பரிசாக வழங்க உள்ளோம்.
மேலும் தங்கம், வெள்ளி நாணயங்கள், அண்டா முதல் சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், டிவி, கட்டில், மெத்தை, உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் பல்வேறு விலை உயர்ந்த பரிசுகளும் இந்த ஆண்டும் வழங்க உள்ளோம்.
இந்த ஆண்டு பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக முதல்வரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி ஜல்லிக்கட்டு விழாவில் கலந்துகொண்டு தொடங்கிவைக்க வேண்டும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தியிடம் வலியுறுத்தியுள்ளோம்.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் 800 முதல் 1200 காளைகள் வரை வாடிவாசலில் அவிழ்த்து விட திட்டமிட்டுள்ளோம். சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஆன்லைன் மூலம் மட்டுமே மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் டோக்கன் வழங்கப்படும். டோக்கனில் குறிப்பிட்டுள்ள நம்பர் படியே வாடிவாசலில் காளைகள் அவிழ்த்து விடப்படும்.
இந்த ஆண்டு எவ்வித இடையூறும் இன்றி தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பட்டு ஜல்லிக்கட்டு சீரும் சிறப்புமாக நடைபெறும்.
சென்ற ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் நடந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை மிகவும் கவனத்துடன் கண்காணித்து வருகிறோம்.
பாலமேடு பேரூராட்சியின் ஒத்துழைப்போடு ஜல்லிக்கட்டு ஏற்படுககள் அனைத்தும் முன்னுரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஆண்டு பார்வையாளர் அமரும் கேலரி கூடுதலாக அமைத்துள்ளோம்.
தவிர வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பார்வையாளர்களுக்கு ஆங்காங்கே தண்ணீர், உணவு வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பாலமேடு மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகம் செய்து வருகிறது.
மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் நேரத்திற்குள் ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்தி முடிக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.