கடலூர் அருகே சட்டவிரோதமாக கருகலைப்பு செய்த இளம் பெண் உயிரிழப்பு:- போலீசார் விசாரணை

– கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது மனைவி அமுதா ( வயது 27), இந்த தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் மூன்றாவதாக அமுதா கருவுற்றார், கருவில் உள்ளது ஆணா பெண்ணா என்பதை தெரிந்து கொள்ள கடந்த 17ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூரில் உள்ள தனியார் மருந்தகத்துக்குச் சென்று ஸ்கேன் செய்துள்ளார்.
அந்த மருந்தக உரிமையாளர் கருவில் உள்ளது பெண் குழந்தை என்று அமுதாவிடம் கூறினார், இதனால் மூன்றாவது குழந்தையும் பெண் என்பதால் குழந்தையை பெற்றெடுக்க விரும்பாத அமுதா மருந்தக உரிமையாளரிடம் கருக்கலைக்க கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து மருந்தக உரிமையாளர் கருக்கலைப்பதற்கு உண்டான மாத்திரைகளை அமுதாவிடம் கொடுத்துள்ளார்., அதனை வாங்கி சாப்பிட்ட அமுதா வேப்பூர் அடுத்துள்ள நிராமணி கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று அங்கு இரு நாட்கள் தங்கி உள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது, இதனால் சிறிது நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அமுதாவை சிகிச்சைக்காக உடனே அருகில் உள்ள வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது அமுதாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர், இதனிடையே அமுதாவின் உடலை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்ட விரோதமாக மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்து உயிரிழந்த பெண்ணால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.