காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து தேனியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல். பெண்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் கைது.

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இன்று சூரத் நீதிமன்றத்தில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற தண்டனையை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் முருகேசன் தலைமையில் தேனியில் காங்கிரஸார் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே இருந்து கம்பம் சாலையில் ஊர்வலமாக வந்த காங்கிரஸார் நேரு சிலை வழியாக மதுரை சாலையில் அமர்ந்து மத்திய பாஜக அரசு, மற்றும் பிரதமர் மோடியை கண்டித்து கோசங்களை எழுப்பினர்.
இதனால் மதுரை – கம்பம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 20பெண்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர்.
செய்தியாளர் தேனி-சதிஸன்.