காட்பாடியில் இயங்கும் சாக்ஸ் கம்பெனியில்ல் பொதுமக்களுக்கு மூச்சு திணறல். கண்டுகொள்ளாமல் கல்லா கட்டுகிறது மாசு கட்டுப்பாட்டு வாரியம்

காட்பாடியில் இயங்கும் சாக்ஸ் கம்பெனியால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படும் அவலம் தொடர்கிறது!
கண்டுகொள்ளாமல் கல்லா கட்டுகிறது மாசு கட்டுப்பாட்டு வாரியம் & தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை!
வேலூர் மாவட்டம், காட்பாடி சி.எம். ஜான் தெருவில் ‘லக்கி டெக்ஸ்டைல்ஸ்’ என்ற பெயரில் மோகன்ராஜ் (55) என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக சாக்ஸ் தயாரிக்கும் கம்பெனியை நடத்தி வருகிறார். இங்கே தயாரிக்கும் சாக்ஸ்கள் பள்ளிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த சாக்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தால் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் தூசுகள் பறந்து செல்வதால் அவர்கள் நிம்மதியுடன் வாழ முடியவில்லை. அவர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் கோளாறு, நுரையீரலில் சளி கட்டி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஒவ்வாமை போன்ற பல்வேறு நோய்கள் கண்ணுக்குத் தெரியாமல் பரவ ஆரம்பித்து விட்டது.
குறிப்பாக இந்த சாக்ஸ் கம்பெனியின் பக்கத்தில் உள்ள வீடுகளில் சமைத்து வைக்கும் உணவுகளின் மீது இந்த சாக்ஸ் துகள்கள் படிவம் போல் படிகின்றன. இந்த மாசு கலந்த காற்றை சுவாசிக்கும் பொதுமக்களுக்கு ஈஸ்னோஃ போலியா நோய் கண்ணுக்கு தெரியாமல் பரவி வருகிறது.
இந்த தகவலை சாக்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளரை சந்தித்து பொதுமக்கள் பல்வேறு புகார்களை தெரிவித்தும் உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் என்று தெனாவெட்டாக கூறுகிறாராம் இந்த மோகன்ராஜ். அத்துடன் நான் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மாதம்தோறும் கப்பம் செலுத்துகிறேன்.
அத்துடன் என்னை நாடிவரும் காவல்துறை, தீயணைப்பு துறை போன்றவர்களுக்கும் கப்பம் கட்டுகிறேன். ஆதலால் என்னை எவனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று கொக்கரிக்கிறார் இந்த மோகன்ராஜ். இந்த சாக்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தின் பக்கத்தில் வசிக்கும் வயதான தம்பதியரான கண்ணன் மற்றும் கீதா ஆகியோர் அரசு துறைகளான மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தீயணைப்புத் துறை, காவல் துறை ஆகியவற்றை நாடிச் சென்று புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகின்றனர். இதற்கு காரணம் அவர்கள் பெரும் மாமூல்தான் காரணம் என்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது.
இந்த சாக்ஸ் தயாரிக்கும் நிறுவனமானது 24 மணி நேரமும் பகல், இரவு பாராமல் இடைவிடாது இயக்கப்படுகிறது. இரவு நிம்மதியாக உறங்க முடியாமல் கீதா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சொல்லொனா துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் மின்வாரியமானது இந்த சாக்ஸ் கம்பெனியின் மின் இணைப்பை நிபந்தனையின்றி துண்டித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கொடுத்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காண்பிப்பதோடு கண்டு கொள்ளவே இல்லை என்பது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.
இதற்கு மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் களப்பணியாளர்கள் முதல் இளநிலை பொறியாளர் வரை மாமூல் பாய்வதால் யாரும் கண்டு கொள்ள முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அனைத்து துறைகளும் மோகன்ராஜுக்கு சாதகமாக உள்ளது. அவர் கொடுக்கும் மாமூல்தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
அதாவது நாய்க்கு எலும்பு துண்டு போடுவது போல மோகன்ராஜ் எலும்பு துண்டை போட்டுவிட்டு தனக்கு எதுவும் தெரியாது என்பது போல அமைதி காத்து வருகிறார். நடுநிலையோடு செயல்பட வேண்டிய காவல்துறையும் மோகன்ராஜூக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படி திரும்பும் இடமெல்லாம் ‘ப’ வைட்டமின் நன்கு வேலை செய்கிறது என்று சொல்லலாம். இவர் ஒரு ஜெகஜால கில்லாடி என்று சொல்லலாம். அத்துடன் இவர் பக்கத்து வீட்டில் உள்ள சுமார் 5 அடி இடத்தை சேர்த்து இவர் தனது இடமாக பாவித்து அதையும் இவரே அனுபவித்து வருகிறார் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.
இதை தட்டிக் கேட்கச் செல்லும் வயதான தம்பதி கண்ணன் -கீதா தம்பதியரை உங்களை நாயை அடிப்பது போல அடித்து வீதியில் வீசி விடுவேன் என்று கூறி மிரட்டுகிறார் மோகன்ராஜ். ஆதலால் வேலூர் மாவட்டத்தில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியம், காவல்துறை ஆகியவை சிறப்பாக செயல்பட்டு இந்த சாக்ஸ் தயாரிக்கும் கம்பெனியின் மீது தகுந்த சட்ட நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் விரைந்து எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
குறிப்பாக இந்த கம்பெனி இரவில் இயக்கப்படுவதை கட்டாயம் தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும் என்கின்றனர் இந்த வயதான தம்பதியர். இதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் வெங்கடேசன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவரும் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார். ஒரு நாள் இரவு கீதாவின் இல்லத்தில் அரசு அதிகாரிகள் தங்கி தூங்க வேண்டும்.
அப்போதுதான் இதில் உள்ள உண்மையை அவர்களால் நன்கு உணர முடியும். இப்படி எங்கு சென்றாலும் முட்டுக்கட்டையாக உள்ளது மோகன்ராஜிற்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.
ஒரு தெம்பை தருகிறது என்றே சொல்லலாம். ஆதலால் குற்றம் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும் அதன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு துறை அதிகாரிகள் இப்படி தூங்கி வழிவது ஏனோ என்பது தெரியவில்லை. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்று சொல்வார்கள்.
இன்று வேண்டுமானாலும் மோகன்ராஜ் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கலாம். ஆனால் விரைவில் இதற்கெல்லாம் ஒரு பதில் சொல்லியே ஆக வேண்டும். யாரை வேண்டுமானாலும் ஏமாற்றி விடலாம். தனது மனசாட்சியை யாராலும் ஏமாற்ற முடியாது என்பதற்கு மோகன்ராஜ் ஒரு சாட்சியாக இருப்பார் என்கின்றனர் நன்கு விவரம் அறிந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள். மக்களுக்காக தமிழக அரசு செயல்படுகிறதா? அல்லது ஒரு தனியார் முதலாளிக்காக தமிழக அரசு செயல் படுகிறதா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
விரைவில் இந்த சாக்ஸ் கம்பெனி நிரந்தரமாக மூடப்படும் காலம் வரும் என்பது எவ்வித ஐயமும் இல்லை என்று கூறுகின்றனர் இந்த வீதிவாழ் பொதுமக்கள். அவர்கள் கூற்று நடைமுறைக்கு சாத்தியமாகுமா? அல்லது நிறைவேறுமா? அல்லது நிறைவேறாமல் பாதியிலேயே நின்று போகுமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்