காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படுத்தப்படும் இரண்டு சக்கர நாற்காலிகள் பழுது: மாற்றுத்திறனாளிகள் கடும் அவதி!

வேலூர் மாவட்டம், காட்பாடி சார் பதிவாளர் அலுவலகம் சித்தூர்- கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வருகிறது. இந்த கட்டடம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் பேரபாய நிலையில் உள்ளது.
இதனால் காட்பாடி கிளித்தான்பட்டறை அருகில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இது திறப்பு விழா காணாததால் இந்த புதிய கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் வருகை தந்தால் அவர்களை அழைத்துச் செல்ல 2 இருசக்கர நாற்காலிகள் உள்ளன. அந்த இரண்டு சக்கர நாற்காலிகளும் பழுதடைந்து பயன்பாடின்றி, உபயோகமின்றி ஓரங்கட்டி காட்சிப் பொருளாக காணப்படுகின்றன.
அந்த இரண்டு சக்கர நாற்காலிகளிலும் டயர் பொருத்தப்படாமல் துருபிடித்த இரும்பு ரிம்முடன் காட்சியளிக்கின்றன. இதனால் மாற்றுத்திறனாளிகள் சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் செல்ல மிகவும் சிரமப்பட்டு சென்றுவர வேண்டிய அவல நிலை தொடர்ந்து நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனை கண்காணித்து புதிய இரண்டு சக்கர நாற்காலிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படுத்தி தர வேண்டிய உரிய நபர்கள் கண்டும் காணாமல் மாற்றுத்திறனாளிகள் படும் அவதியை கைகட்டி வேடிக்கை பார்த்து ரசித்து வருகின்றனர்.
இதனால் இந்த காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்துக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் இங்கு ஏதாவது புகார் புத்தகம் உள்ளதா?அல்லது இது குறித்து எங்கு புகாரை பதிவு செய்வது என்று நன்கு விவரம் அறிந்தவர்களை பார்த்து அவ்வப்போது கேட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வளவு மனம் நொந்து போன மாற்றுத்திறனாளிகள் நடந்து செல்ல முடியாமல் இப்படி அவதிப்படுவது அன்றாட நடவடிக்கையில் ஒன்றாக மாறிவிட்டது காட்பாடியில் என்று சொன்னால் அது மிகையாகாது.
அரசுக்காக மக்களா? இல்லை மக்களுக்காக அரசா? என்பதை காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ளவர்கள் தான் மாற்றுத்திறனாளிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகளை கிள்ளுக்கீரைகள் போல் நினைத்து விட்டனர் என்கின்றனர் நன்கு விவரம் அறிந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள். இந்த நிலை மாற வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நிம்மதியாக இரண்டு சக்கர நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு உள்ளே வந்து தங்களது அலுவல்களை முடித்துக் கொண்டு நிம்மதியாக செல்ல வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக மாறி உள்ளது.
இப்படி ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பு தமிழக அரசால் நிறைவேற்றப்படுமா? அல்லது கண்டும் காணாமல் விட்டுவிட்டு மாற்றுத்திறனாளிகள் படும் அவதியை தொடர்ந்து வேடிக்கை பார்ப்பார்களா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்