காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் அட்டகாசம்: பொதுமக்கள் கடும் அவதி!

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். நோயாளிகளும் வீட்டில் இருக்க முடியாமல் தவியாய் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் குறிஞ்சி நகர் கெங்கை அம்மன் கோயில் தெருவில் கெங்கை அம்மன் சிரசு திருவிழா நடந்து வருகிறது. இதற்காக இந்த கோயிலில் இருந்து சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஒவ்வொரு மின்கம்பத்திலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் ஒலி மாசு எனப்படும் சப்தம் அதிகமாக வைத்து பாடல்கள் ஒளிபரப்பாகின்றன.
இதனால் வீடுகளில் உள்ள நோயாளிகள் மற்றும் வயதானவர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காதில் உள்ள செவிப்பறைகள் அதிரும் வண்ணம் இந்த பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்படுகின்றன. இந்த ‘ஒலி மாசு’ எனப்படும் நாய்ஸ் பொல்யூஷன் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் கட்டுப்படுத்தப்பட வேண்டும் மற்றும் காவல் துறையால் இந்த க கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் தடை செய்யப்பட வேண்டும். ஆனால் இந்த இரண்டு துறைகளும் கண்டும் காணாமல் விட்டுவிட்டன.
இதனால் கோயில் நிர்வாகம் சார்பில் தனது விருப்பம் போல் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை கட்டி வைத்து விளையாடிக் கொண்டுள்ளது. பாக்ஸ் வடிவில் உள்ள ஒலிபெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது சட்டம். ஆனால் இவர்கள் சட்டத்தையும் தமிழக அரசின் உத்தரவையும் மீறி கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இதை தடுக்க வேண்டிய காவல்துறையும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த ஒலி மாசால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், நோயாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவர்களின் வேண்டுகோள் நிறைவேற்றப்படுமா? அல்லது கண்டும் காணாமல் விடப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.