குற்றால அருவிகளில் 5 நாட்களுக்கு பின் குளிக்க அனுமதி. அருவிகளில் குளிக்க படையெடுக்கும் ஐய்யப்ப பக்தர்கள் கூட்டம்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தென்காசி மாவட்டத்தில் புகழ் பெற்ற சுற்றுலா ஸ்தலமான குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதம் சீசன் காலமாகும். அப்போது தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்கள், வெளிநாட்டினர் என பல லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவார்கள்.
இதே போன்று ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை ஐய்யப்பன் கோவில் சீசன் காலமான கார்த்திகை, மார்கழி, தை ஆகிய 3 மாதமும் சபரிமலைக்கு இரு முடி கட்டி செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் குற்றாலத்திற்கு வருகை தந்து அருவிகளில் புனித நீராடிய பின்னரே சபரிமலை செல்வார்கள்.
தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளும் ஐய்யப்ப பக்தர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் குற்றாலம் மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை நின்றதால் குற்றால அருவிகளில் நீர் வரத்து சீரானது. இதனைத் தொடர்ந்து 5 நாட்களாக போடப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டு குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று அனுமதி வழங்கப்பட்டது.
இதனால் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு ஐய்யப்ப பக்தர்கள் படையெடுத்து கூட்டம் கூட்டமாக வருகை தந்த அருவிகளில் புனித நீராடி மகிழ்ந்து வருகின்றனர்.