கோவில்பட்டி, அறநிலையத்துறை இடத்தை மீட்டு கடை இழந்தவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க வேண்டும் என ம.தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது.

கோவில்பட்டியில் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள
அறநிலையத்துறை இடத்தை மீட்டு கடை இழந்தவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க வேண்டும் என ம.தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, கோவில்பட்டி நகர ம.தி.மு.க., செயலாளர் பால்ராஜ், தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது ;
“ கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமாக கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள ஓடையின் மேல், சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னதாக, 108 கடைகள் அமைக்கப்பட்டு, கடைகளுக்கு திருக்கோயிலில் இருந்து வாடகை வசூலித்து வரப்பட்டது.
ஓடையின் மீது கடைகள் அமைத்து திருக்கோயில் வாடகை வசூலித்துக் கொள்ள “Board of Revenue” அனுமதி வழங்கியிருந்தது. இந்த கடைகளின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.32 லட்சம் வாடகை வருமானம் வந்து கொண்டிருந்தது. கடைகள் ஓடையில் ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ளது என வருவாய்த்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு, 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 108 கடைகளையும் இடித்தனர். இதனால் இந்த கடைகளின் மூலம் திருக்கோயிலுக்கு வரப்பெற்ற வாடகை பணமான, ஆண்டு ஒன்றுக்கு ரூ.32 லட்சம் திருக்கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
108 கடைகளின் வாடகைதாரர்கள், கடைகளில் பணியாற்றிய பணியாளர்கள் உள்ளிட்ட 400 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சிரமம் அடைந்து வருகின்றனர்.
கடையின் வாடகைதாரர்கள் மாற்று இடம் தந்து தங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க வேண்டி திருக்கோயில் நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், தற்போது வரை எந்த பலனும் இல்லை. திருக்கோயிலுக்கு சொந்தமாக கோவில்பட்டி மெயின்ரோட்டில் அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகில் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 50 செண்ட் (சுமார் 21,800 சதுர அடி) காலியிடம் உள்ளது.
இந்த காலியிடத்தில் 10-க்கு 10 அளவில் சுமார் 100 கடைகள், சுமார் 12000 சதுரடி பரப்பு கொண்ட கட்டடம் கட்டப்பட்டு, அருள்மிகு செண்பகவல்லி அம்மன் பெயரில் வணிக வளாகம் அமைத்து வாடகைக்கு கொடுப்பதன் மூலம் திருக்கோயிலுக்கு மாதம் ஒன்றுக்கு வாடகையாக குறைந்த பட்சம் ரூ.5,00,000 வீதம் ஆண்டுக்கு ரூ.60 லட்சம் வாடகை வருமானம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
இந்த கடைகளில் ஓடையின் மீது இருந்த கடைகளை இழந்த வாடகைதாரர்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் அவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
நகரின் மத்தியில் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சுமார் 50 சென்ட் (21,800 சதுர அடி) காலியிடத்தில் ஒரு சிறிய பகுதியை மட்டும் கடந்த அதிமுக., ஆட்சியில் ஒரு தனி நபருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
எனவே, கோவில்பட்டி நகரின் மத்தியில் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள
திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 50 சென்ட் காலியிடத்தை தனி நபரின் ஆக்ரமிப்பிலிருந்து மீட்டு வணிக வளாகம் அமைத்து, திருக்கோயில் இழந்த வாடகை வருமானத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். “
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
