சங்கரன்கோவில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2000க்கு விற்பனை. விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இங்குள்ள விவசாயிகள் மல்லிகை பூ பிச்சிப்பூ, முல்லைப்பூ, கனகாம்பரம், செவ்வந்தி, கேந்தி சேவல், சம்பங்கி உட்பட ஏராளமான மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோவில் தெப்பக்குள மண்டபத்தில் அமைந்துள்ள தினசரி மொத்த பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு அங்கு ஏலம் மூலம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த பூமார்க்கெட்டிப் இருந்து தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலமாக கேரளாவிற்கு அதிகளவு பூக்கள் கொண்டு செல்லப்பட்டு விற்பனையாகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மல்லிகை பூ ஒரு கிலோ 1000 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது.
மல்லிகை பூ மழை காலங்களில் அதிக அளவில் விளைச்சல் இருக்காது. அதே நேரத்தில் பிச்சிப்பூ மற்றும் முல்லை பூ அதிக அளவில் விளையும் இந்நிலையில் இன்று சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ மல்லிகைப் பூ 2000 ரூபாய்க்கு விற்பனையானது.
பூ விளைச்சல் குறைவாக உள்ளதாலும் நாளை திருமண வைபவங்கள் மற்றும் ஐய்யப்ப பக்தர்களுக்கு மல்லிகைப் பூ தேவை அதிகம் உள்ளதாலும் விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தரப்பில் தகவல் தரப்படுகிறது.
ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ 2000க்கு விலை போனதால் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.