BREAKING NEWS

செம்பனார்கோயில் அருகே மீன் குட்டையில் விழுந்து பள்ளி மாணவர் சாவு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

செம்பனார்கோயில் அருகே மீன் குட்டையில் விழுந்து பள்ளி மாணவர் சாவு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே மேலையூர் கிராமம் அய்யர் காலணியை சேர்ந்த மகேந்திரன் மகன் அபினேஷ் (16). இவர் செம்பனார்கோயிலில் உள்ள சம்பந்தம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று முன்தினம் அந்தப் பகுதியில் உள்ள மீன் வளர்ப்பு குட்டையில் நண்பர்களுடன் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது குட்டையில் உள்ள தண்ணீரில் மூழ்கி மாயமானார்.

 

உடனே சக நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் குளத்தில் இறங்கி அபினேஷை தேடினர். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து சேற்றில் சிக்கிய அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அபினேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள், அபினேஷ் இறப்பு குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யவிடாமல் தடுத்தனர்.

உயிரிழந்த மாணவன் அபினேஷ்

 

இந்த நிலையில் நேற்று மதியம் செம்பனார்கோயில் மேல முக்கூட்டில், விதிமுறைகளை மீறி ஆழமாக மீன் குட்டை அமைத்து மாணவரின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இறந்த மாணவரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

தகவல் அறிந்த மயிலாடுதுறை டிஎஸ்பி சஞ்சீவ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சித்ரா (செம்பனார்கோயில்), சிங்காரவேல் (பொறையாறு), தாசில்தார் காந்திமதி மற்றும் ஏராளமான போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால், அவர்கள் கலைந்து சென்றனர்.

 

இந்த பேச்சுவார்த்தையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் கிடைக்கவும், விதிமுறைகளை மீறி மீன் குட்டை அமைத்து பராமரிக்காதவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாணவர் அபினேசின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவர் இறந்த சம்பவம், செம்பனார்கோயில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

CATEGORIES
TAGS