செம்பனார்கோயில் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் ராபியாநர்கிஸ்பானு, வெண்ணிலா தென்னரசு அப்துல் மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-
மோகன்தாஸ்:- கிடாரங்கொண்டான்- தலையுடையவர்கோயில்பத்து, பொன்செய்-முடிகண்டநல்லூர் ஆகிய பகுதியில் இணைப்பு பாலம் வேண்டும். நாச்சிகட்டளை -தலைச்சங்காடு செல்லும் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.
சுப்பிரமணியன்:- கஞ்சாநகரம் அருகே மங்கனூர் கிராமத்தில் உள்ள பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும். மங்கனூர் தெற்கு தெரு சாலையை சீரமைத்து தர வேண்டும்.
ராஜ் கண்ணன்:- ஆக்கூரில் பிடாரி குளம் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். புங்கையன் தோப்பு பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும். மாமாகுடி அங்கன்வாடி கட்டிடத்தை புதிதாக கட்ட வேண்டும். பூந்தாழை முதல் மாமாகுடி வரை தார் சாலை அமைக்க வேண்டும்.
சக்கரபாணி:- கருவாழக்கரை மாரியம்மன் கோயில் பகுதியில் வடிகால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மருதூர் அரசு பள்ளி நடுநிலைப் பள்ளி செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்.
ரஜினி:- 1-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட குளங்களை தூர்வார வேண்டும்.
தேவிகா:- இலுப்பூர் ஊராட்சி எரவாஞ்சேரி மாரியம்மன் கோயில் சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். சேதமடைந்த எரவாஞ்சேரி பாலத்தை புதிதாக கட்ட வேண்டும்.
லெனின் தாஸ்:- காழியப்பநல்லூர் ஊராட்சியில் நீர்த்தேக்க தொட்டி, ஆழ்துளைகிணறு ஆகியவற்றை தனிநபர் ஆக்கிரமித்துள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். டி.மணல்மேடு ஊராட்சியில் காடுவெட்டி, நடுவலூர், நட்சத்திரமாலை ஆகிய கிராமங்களுக்கு சுடுகாடு சாலை அமைத்து தர வேண்டும். டி.மணல்மேடு ஊராட்சியில் ஈமகிரியை மண்டபம் அமைத்து தர வேண்டும்.
ஜெயந்தி:- தில்லையாடி-திருவிடைக்கழி இடையே பூச்சாத்தனூர் பகுதியில் உள்ள சேதமடைந்த பாலத்தை புதிதாக கட்டித் தர வேண்டும். ஊராட்சியில் 100 நாள் பணியில் ஈடுபடும் மக்களுக்கு விடுபடாமல் சம்பளம் வழங்க வேண்டும்.
இதுதொடர்பாக ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில், தற்போது உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் தொடர்பாக உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
தொடர்ந்து தற்பொழுது நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதால் அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு பாதுகாப்புடனும், விழிப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். முடிவில் ஒன்றிய குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர் நன்றி தெரிவித்தார்.