சோளிங்கர் தாலுக்கா அலுவலகம் முன்பு விஏஓக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் தாலுகா முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து ஃபிரான்ஸிஸ் கடந்த 13 ந்தேதி மணல் கடத்தலை தடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.
வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் புகுந்து பணியில் இருந்த லூர்து ஃபிரான்ஸிஸை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்நிலையில் சோளிங்கர் வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் ஷானு தலைமை தாங்கினார். கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், பணி பாதுகாப்பு சட்டத்தினை கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக விஏஓக்கள் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். இதில் சோளிங்கர் தாலுகாவிற்கு உட்பட்ட விஏஓக்கள் பலர் கலந்து கொண்டனர்.