தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் இன்று இரவு குருபெயர்ச்சி விழா..!!

குருபெயர்ச்சி விழா மீன ராசியிலிருந்து மேஷராசிக்கு குருபகவான் இரவு 11.21 மணிக்கு பிரவேசித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்அருகே திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற இந்த கோவில் தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர் என்றும், சுயம்புவாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயரும் கொண்டவர். பெரும்பாலும் எல்லா கோவில்களிலும் சிவபெருமானின் ஞானவடிவான தட்சிணாமூர்த்தியையே குருவாக பாவித்து வழிபடப்படுகிறது.
ஆனால் திட்டை கோவிலில் வசிஷ்டேஸ்வரர், சுகந்தகுந்தளாம்பிகை சன்னதிகளுக்கு நடுவில் எங்கும் இல்லாத சிறப்போடு தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளி பக்தர்களுக்கு குருபகவான் அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆவார்.
குருபார்க்க கோடி நன்மை குருபகவான் ஒரு முழு சுககிரகம் ஆவார். ஒருவரது ஜாதகத்தில் மிக கடுமையான பாவங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளை கூட தனது பார்வை பலத்தால் காப்பாற்றும் சக்தியாக குருபகவான் விளங்குகிறார். அதனால் தான் குருபார்க்க கோடி நன்மை என்பதும், குரு பார்க்க தோஷம் விலகும் என்பதும் பழமொழிகள் ஆகும். இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.
செய்தியாளர் ர.தீனதயாளன்.