தஞ்சை பள்ளிஅக்ரஹாரம் மங்கள விநாயகர் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கி சென்ற மர்ம நபர்கள் போலீசார் விசாரணை- பரபரப்பு.

தஞ்சை மாநகராட்சி 1-வது வார்டு பள்ளி அக்ரஹாரம் வடக்கு தெருவில் மங்கள விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர். கடந்த ஜூன் மாதம் இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிலையில் இரவு பூஜைகள் முடிந்த பின்னர் கோவில் அடைக்கப்பட்டது. இதனை அறிந்து நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் கோவில் கேட்டின் பூட்டை உடைத்தனர்.
பின்னர் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை அப்படியே அலேக்காக தூக்கி கொண்டு தப்பி ஓடினர். கோவிலின் கேட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டும், உண்டியல் காணாதது கண்டும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மர்ம நபர்கள் உண்டியலை தூக்கி சென்றது அவர்களுக்கு தெரிய வந்தது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். உண்டியல் தூக்கி சென்றதால் அதில் எவ்வளவு பணம், நகைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருட்டு நடந்த இந்த கோவிலில் ஏற்கனவே கடந்த மாதம் உண்டியல் உடைத்து பணம் ,நகை திருட்டு போனது குறிப்பிடத்தக்கது. தற்போது உண்டியலையே திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உண்டியலை தூக்கிச் சென்ற அவர்கள் அருகில் உள்ள மாநகராட்சி பள்ளியின் பின்புறம் உண்டியலை உடைத்து பணம் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றுள்ளனர் உண்டியலை கைப்பற்றிய போலீசார் கைரேகை நிபுணர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் பள்ளியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தான் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது அதற்கு இன்னும் இணைப்பு வழங்காததால் இதனை அறிந்த சிலரே செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.