தஞ்சை மாவட்டத்தில் 250 இருளர் மற்றும் ஆதியன் சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் விளிம்பு நிலை மக்களை அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர்களுக்கு விளிம்பு நிலை மக்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கு நேரில் சென்று சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து அவற்றை பூர்த்தி செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இதனை அடுத்து தஞ்சை மாவட்டத்தில் விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வசிப்பது கண்டறியப்பட்டது. இதேபோல் பட்டுக்கோட்டை பகுதியில் ஆதியன் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் விளிம்பு நிலையில் வசித்து வருவது தெரிய வந்தது.
ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேட்டூர் மற்றும் தேனாம்படுகை பகுதியில் வசித்து வரும் இருளர் சமூக மக்களுக்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக சாதி சான்றிதழ் அவர்கள் வசிக்கும் பகுதிக்கே நேரில் சென்று வழங்கப்பட்டது.
தற்போது திருவிடைமருதூரை அடுத்த சோழபுரம் அருகே உள்ள பனங்குளம் கிராமத்தில் வசிக்கும் இருளர் சமூகத்தைச் சேர்ந்த 30 குடும்பத்தினருக்கு சுமார் 150 சாதி சான்றிதழ்கள் தயார் செய்யப்பட்டு முதற்கட்டமாக 15 பேருக்கு சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.மீ தமுள்ள அனைவருக்கும் சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு விடும்.
இதேபோல் அடுத்த கட்டமாக இந்த மக்கள் வசிக்க பட்டாவுடன் கூடிய வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஏற்கனவே சாதி சான்றிதழ் வழங்கப்பட்ட மெலட்டூர் தேனாம்பேட்டை பகுதி மக்களுக்காக அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே தனியாருடன் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு பட்ட இடங்கள் அரசு சார்பில் வாங்கப்பட்டுள்ளது.
அதில் அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொருவருக்கும் தனித்தனி கான்கிரீட் வீடு அரசு சார்பில் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தஞ்சை மாவட்டத்தை பொறுத்த வரை இதுவரையில் சுமார் 250 இருளர் மற்றும் ஆதியன் சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த சமூகத்தை சேர்ந்த மாணவர்களின் மேல் படிப்பு தடைப்படாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை கிடைக்க இந்த சான்று சான்றிதழ்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சுமார் 40 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து வழங்கப்பட்டுள்ள இந்த சாதி சான்றிதழ்களை இந்த சமூக மக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கோட்டாட்சியர் லதா, திருவிடைமருதூர் வட்டாட்சியர் சுசீலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூங்குழலி, சூரிய நாராயணன், ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி இளங்கோவன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.