BREAKING NEWS

தண்ணீர் தினத்தை ஒட்டி ஆக்கூரில் கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.

தண்ணீர் தினத்தை ஒட்டி ஆக்கூரில் கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம் ஆக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது‌. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமை தாங்கினார்.

 

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், இணை இயக்குநர் (வேளாண்மை) சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் வரவேற்றார்.

 

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசும்போது கூறுகையில்,

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பாக கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 கிராம ஊராட்சிகளிலும் இன்று (நேற்று) கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. கிராம சபை கூட்டம் என்பது அனைத்து கிராம மக்களும் வருகை தந்து ஊராட்சிகளில் என்னென்ன பணிகள் செய்யப்பட்டன, மேலும் எந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்பது போன்ற முக்கிய பொருட்கள் தெரியப்படுத்தப்படும்.

 

 

இதுவரை கிராம சபை கூட்டம் குடியரசு தினம் ஜனவரி 26, தொழிலாளர் தினம் மே 1, சுதந்திர தினம் ஆகஸ்ட் 15, காந்தி ஜெயந்தி அக்டோபர் 2 என ஆண்டுக்கு நான்கு முறை நடைபெற்று வந்ததை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூடுதலாக உலக தண்ணீர் தினம் மார்ச் 22, உள்ளாட்சி தினம் நவம்பர் 1 ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார். ஆக மொத்தம் வருடத்திற்கு ஆறு முறை கிராமசபை கூட்டம் நடைபெறும். கிராம சபை கூட்டத்தின் முக்கிய நோக்கம் ஊராட்சியில் நடைபெற்ற எல்லா வரவு-செலவு கணக்குகளையும் பொதுமக்கள் முன்பாக படிக்க வேண்டும்.

 

மக்களிடம் எடுத்துச் சொல்லப்படும் அரசின் முக்கிய திட்டங்களை பற்றி நன்கு அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.மேலும் கிராம சபை கூட்டம் தொடங்கும் நேரம் செயலி வாயிலாக கண்காணிக்கப்படுகிறது. பொதுமக்கள் முன்னிலையில் வாசிக்கப்படும் முக்கிய கூட்ட பொருட்கள் தொடர்பாக சந்தேகம் இருப்பின் பொதுமக்கள் அதனை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். சிறப்பான திட்டமாக நம்ம ஊரு சூப்பர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெண் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளை படிக்க வைத்து நல்ல கல்வி அறிவை பெற்றோர் தர வேண்டும். உயர் கல்வி படிக்க வைத்து ஊக்கப்படுத்தி நல்ல வேலைக்கு அனுப்பி வைக்க வேண்டும். பெண் கல்வியை ஊக்கப்படுத்த தமிழக முதல்வர் புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

 

 

எனவே பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளின் எதிர்காலத்தில் அக்கறை கொண்டு, பள்ளிக்கு அனுப்பி வைத்து உயர்கல்வி படிக்க ஊக்கப்படுத்த வேண்டும்.
அதேபோல் ஆக்கூர் ஊராட்சியில் பொது நூலகத்திற்கு தனிக்கட்டிடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தங்கும் விடுதி, ஆக்கூர் சவுரியாள்புரம், அன்னப்பன்பேட்டை இணைப்பு சாலை வசதி உள்ளிவைகள் படிப்படியாக செய்து தரப்படும். இன்று (நேற்று) உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

 

தண்ணீரின் முக்கியத்துவம் இன்றியமையாதது. வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டியை அமைத்து, மழை நீரை சேகரித்து பயன்படுத்தும் வகையில் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அனைவரும் தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து அதனை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.

 

கூட்டத்தில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, உதவி செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) ஸ்ரீதர், செம்பனார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, மீனா, மாவட்ட கவுன்சிலர் துளசிரேகா ரமேஷ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சிங்காரவேலு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS