தமிழகத்தில் 67 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருந்தும், அதிமுக எதிர்கட்சியாக செயல்படவில்லையென பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி விமர்சித்துள்ளார்.

67எம்எல்ஏக்கள் இருந்தும் சுத்த வேஸ்ட்.! எதிர் கட்சி வேலையை செய்யவில்லை, அதிமுகவை மட்டம் தட்டும் வி.பி துரைசாமி
தமிழகத்தில் 67 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருந்தும், அதிமுக எதிர்கட்சியாக செயல்படவில்லையென பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி விமர்சித்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் புரட்சி தலைவி பேரவை சார்பாக பயிலரங்கம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்னையன், பாஜக தனது கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், அதன் வளர்ச்சி அதிமுகவுக்கு நல்லதல்ல என கூறினார். திராவிட கொள்கைகள் மற்றும் தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிராக பாஜக செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர், காவிரி நதிநீர் மற்றும் முல்லை பெரியாறு விவகாரத்தில் மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனைகளில் தேசிய கட்சி இரட்டை வேடம் போடுகிறது என தெரிவித்தார். அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பாஜகவின் அணுகுமுறையை சமூக ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்த வேண்டும் என்று பொன்னையன் கேட்டுக்கொண்டார். இந்த கருத்து அதிமுக-பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பதில் அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவின் வளர்ச்சி தெரியவரும் என கூறியிருந்தார்.

இதனையடுத்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, ராஜ்யசபா சீட் கிடைக்காத விரக்தியில் பொன்னையன் பாஜகவை குற்றம் சாட்டுவது கண்டிக்கத்தக்கது என கூறினார். பாஜகவை விமர்சனம் செய்து பேசிய அதிமுக மூத்த தலைவர் பொன்னையனிடம் அக்கட்சி விளக்கம் கேட்க வேண்டும் என தெரிவித்தார். தமிழகத்தில் அதிமுக ஒரு வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட வில்லை என தெரிவித்தவர், அதிமுக 67 சட்டமன்ற உறுப்பினர் வைத்து கொண்டு எதிர்கட்சியாக சரியாக செயல்பட வில்லை, ஆனால் 4 சட்டமன்ற உறுப்பினர் வைத்து கொண்டு பாஜக எதிர்கட்சியாக அனைத்து கேள்விகளையும் முன் வைக்கிறது என கூறினார். ஆளுங்கட்சியின் ஊழல்களை வெளிக்கொண்டு வருவதில் அதிமுக தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார். இதே போல எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி வலுவாக செய்யப்படவில்லை என குற்றம் சாட்டினார். அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் தேவையில்லாமல் கருத்துகளை தெரிவித்துள்ளார், காவிரி, முல்லை பெரியாறு, மேகதாது பிரச்சனையில் தமிழர்களுக்காக பாஜக எதுவும் செய்யவில்லை என கூறியதை வன்மையாக கண்டிப்பதாகவும் வி.பி.துரைசாமி குறிப்பிட்டார்.

இலங்கையிடம் உள்ள கச்சத்தீவை மீட்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுப்பார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பாஜக தெரிவிக்கும் தகவல்கள் தவறாக இருப்பின் தமிழக அரசு வழக்கு தொடரட்டும் என வி.பி.துரைசாமி தெரிவித்தார்.
