தரங்கம்பாடி தாலுக்கா மற்றும் பேரூராட்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி அலுவலகம், தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம், பொறையார் பேருந்து நிலையம், ஒழுகை மங்களத்தில் நடைபெற்று வரும் தூய்மை பணி உள்ளிட்ட இடங்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குப் பின் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளையும் கிடப்பில் உள்ள பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.
அதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பேரூராட்சி அலுவலகம் பேரூராட்சி அலுவலகத்தின் கீழ் இயங்கும் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை வளம் மீட்பு பூங்கா செயல்பாடு, வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் பொது இ சேவை மையம், வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் வழங்கி உள்ள மனுக்களுக்கு தீர்வு காணப்பட்ட விவரம், பொறையார் பேருந்து நிலையம், ஒழுகை மங்கலத்தில் தூய்மை பணி, பொறையார் சந்தைவெளி தெருவில் உள்ள சாக்கடையில் தேங்கியுள்ள கழிவுநரை அகற்றவும் மழை நீர் வடிகால் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றவும் போன்ற பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன்.
இங்கு பொதுமக்கள் மற்றும் பத்திரிகைத்துறை சார்ந்தவர்கள் பொதுவான கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் சிதம்பரம் நாகப்பட்டினம் பேருந்துகள் உடனடியாக பொறையார் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சந்தைவெளியில் தெருவில் தேங்கியுள்ள குப்பைகள் உடனடியாக அகற்றப்படும்.
சாக்கடை வடிகால் மீது கான்கிரீட் சிலாப் கொண்டு மூடப்படும். சாலையில் ஒரு சில இடங்களில் காணப்படுகின்ற மேடு பள்ளங்கள் உடனடியாக சீர் செய்து தரப்படும். திருக்கடையூர் ஆனைகுளத்தில் சுற்றித் திரியும் பன்றிகள் வெளியில் சுற்றாதவாறு பார்த்துக் கொள்ள உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
ஆய்வின் போது தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி குமரவேல், தரங்கம்பாடி வட்டாட்சியர் புனிதா, பேரூராட்சி துணைத் தலைவர் பொன் ராஜேந்திரன், தரங்கம்பாடி மண்டல துணை வட்டாட்சியர் சதீஷ், தரங்கம்பாடிபேரூராட்சி செயல் அலுவலர் பூபதி.கமலக் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.