திராவிட மாடல் ஆட்சி குறித்து சேகர்பாபு புது விளக்கம்..

தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள, செய்திக்காக மதுரை ஆதீனம் தொடர்ந்து பேசி வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். விரைவில் மதுரை ஆதீனமும் தமிழ்நாடு அரசை ஆதரிக்கும் நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திடீரென்று இன்று காலை வருகை தந்தார். பின்னர் கோயில் பொது தீட்சிதர்கள் கிழக்கு கோபுர வாயிலில் அமைச்சரை வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு, சட்டையை கழற்றி கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் பொது தீட்சிதர்கள் சிறப்பு அர்ச்சனை, ஆராதனை செய்து அமைச்சருக்கு பிரசாதம் வழங்கினர். தொடர்ந்து, ஆயிரங்கால் மண்டபம் முன்பு உள்ள நடனப் பந்தலில் தரையில் அமர்ந்து கோயில் பொதுதீட்சிதர்களுடன் கலந்துரையாடினார். அமைச்சருடன் இந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் அசோக்குமார் ஊள்ளிட்ட அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,” கனகசபை மீதேறி சாமி தரிசனம் செய்ததாகவும் தீட்சிதர்கள் மகிழ்ச்சியோடு அனைத்து சன்னதிக்கு அழைத்து சென்றதாகவும் கூறினார். மேலும் தீட்சிதர்களின் நிலைப்பாட்டையும், அரசு நிலைப்பாடும் குறித்து பேசப்பட்டது. அரசுக்குட்பட்ட சட்ட திட்டங்கள்,இந்து சமய அறநிலையத்துறை சட்ட திட்டங்கள் யாருக்கும் சில மனக்கஷ்டங்கள் இல்லாத வகையில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
மக்களின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே விரைவில் நல்லதொரு சுமுகமான முடிவு எடுக்கப்படும். அனைத்து விதமான பிரச்சனைகளையும் நடராஜர் தீர்த்துவைப்பார் என்று தெரிவித்தார். இந்த ஆட்சி துலாக்கோல் போன்றது. அனைவருக்கும் சமமான நீதி வழங்கும் ஆட்சி இது. எந்தவித பாதகம் ஏற்படாமல் இருக்கவும், இறைவனுக்கும், பக்தர்களுக்கும், தீட்சிதர்களுக்கும் ஒரு பாலமாக இருந்து அனைத்து பிரச்சனைகளுக்கு முடிவு ஏற்படுத்தப்படும் என்று கூறினார்.
திராவிட மாடல் ஆட்சியை பொறுத்தவரை ஆத்திகர்கள், நாத்திகர்கள் என இரண்டையும் சேர்ந்த ஆட்சி. முதல்வர் ஸ்டாலின் அரசு யாருக்கும் நீதியை மறுக்காது. அப்படி இந்துசமய அறநிலையத்துறையும் செயல்படாது என்றார். மேலும் நடராஜர் கோயில் தீட்சிதர்களும் பல்வேறு வகையில் எங்கள் ஆட்சி வரும் உதவியாக இருந்துள்ளனர் என்று கூறினார். மேலும் மதுரை ஆதினம் குறித்த கேள்விக்கு,” தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள, செய்திக்காக மதுரை ஆதீனம் தொடர்ந்து பேசி வருவதாக கூறிய அமைச்சர், விரைவில் மதுரை ஆதீனமும் தமிழ்நாடு அரசை ஆதரிக்கும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.
அவரை திமுக நகர செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர், துணை செயலாளர், நகர அவை தலைவர், மாவட்ட பிரிதிநிதி, கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்றனர்.