திருவிழா ஊர்வலத்தின்போது ட்ரம்ஸ், பேண்ட் வாத்தியம் ஏற்பாடு செய்யவில்லை என தகராறு.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கல்லாளங்குப்பம் கிராமத்தில் நேற்று இரவு கங்கை அம்மன் திருவிழா நடைபெற்றது. திருவிழா ஊர்வலத்தின்போது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் கவிக்குமார் (25), சதீஷ் (23), ஜெய்சங்கர் (25) ஆகியோர் திருவிழாவில் ட்ரம்ஸ், பேண்ட் வாத்தியம் ஏன் ஏற்பாடு செய்யவில்லை என கேட்டு தகராறு செய்தனர்.
அதற்கு விழா குழுவினர் பேண்ட் வாத்தியம் வைப்பது எங்கள் விருப்பம் நீங்கள் ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் அங்கு இருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் திருவிழா குழுவை சேர்ந்த பிரவீன் (35), தகறாரில் ஈடுபட்ட வாலிபர் சதீஷ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து இருவரும் தனித்தனியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் திருவிழாவிற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்காததை கண்டித்தும் தகறாரில் ஈடுபட்ட வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் 50 க்கும் மேற்பட்டோர் கொண்டபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து எஸ்ஐ ராமமூர்த்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தகராறில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக எஸ்ஐ உறுதி அளித்ததின் பேரில் விழா குழுவினர் கலைந்து சென்றனர். இதனால் கொண்ட பாளையம் காவல் நிலையம் மற்றும் கல்லால குப்பம் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.