தீட்சிதர்களுக்கு எதிராக நாங்கள் இல்லை.. ஆதினங்களின் பாரம்பரியங்களில் அரசு தலையிடாது – அமைச்சர் சேகர்பாபு.

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம், தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பக்தர்கள் கூறிய புகார்கள் பற்றி ஆய்வு செய்யவே சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பினோம். சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை ஏற்கும் என கடிதத்தில் நாங்கள் சொல்லவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம், தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பக்தர்கள் கூறிய புகார்கள் பற்றி ஆய்வு செய்யவே சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பினோம். சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை ஏற்கும் என கடிதத்தில் நாங்கள் சொல்லவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்திற்கு இன்று காலை வருகை புரிந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு வருகை தந்த அமைச்சர் ஆதீனத்தின் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு ,”சைவத்துடன், தமிழை வளர்க்கும் பணியில் தொன்மையான ஆதீனங்கள் ஈடுபட்டுள்ளன. ஆதீனங்களுக்கு உண்டான சிறப்பை தமிழக அரசு வழங்கும். அவற்றின் பாரம்பரியங்களில் தமிழக அரசும் இந்து அறநிலையத் துறையும் தலையிடாது. பொதுக் கோயில்களில் ஏதேனும் பிரச்னைகள், முறைகேடுகள் ஏற்பட்டால் அதில் தலையிடும் உரிமை அறநிலையத்துறைக்கு உண்டு. இது தீட்சிதர்கள், நடராஜர் கோயில் நிர்வாகத்துக்கு எதிரான நடவடிக்கை அல்ல. சிதம்பரம் ஆலயத்தில் பக்தர்கள் தெரிவித்த புகாரின்படி விருப்பு வெறுப்பு இன்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நியாயத்தின்படியே அறநிலையத்துறை செயல்படும். ஆதீனத்தின் கோயில்கள் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் கணக்கு வழக்கு பார்ப்பது வழக்கமான ஒரு நடைமுறை தான் என்று தெரிவித்தார். இதுபோன்ற கோயில்களில் இந்து சமய அறநிலையத்தறை தலையிடவே தலையிடாது என்றும் கூறினார்.

மேலும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே சிதம்பரம் நடராஜர் கோயிலில், கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறிய அவர், மற்றபடி சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை இந்து அறநிலைத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை தெரிவித்தார். தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான திருக்கடையூர் கோயில் மிகச்சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது. திருவாரூரில் இடிந்து விழுந்த பழைமையான மண்டபத்தை சீரமைக்கும் பணி இன்று துவங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
