தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் குடும்பத்தோடு வந்து தரிசித்த பக்தர்கள் – மஹா அன்னதானம்

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் நடந்த சனிப்பெயர்ச்சி விழாவில் சனீஸ்வரருக்கு 64வகையான அபிஷேகம் மற்றும் மஹா யாக வேள்விகளுடன் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் குடும்பத்தோடு வந்து பங்கேற்ற நிலையில், பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் சித்தர் பீடம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில், தென்தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத சனீஸ்வரர் 11அடி உயரத்தில் ஸ்ரீமங்களம் தரும் சனீஸ்வரராக தனது வாகனமான காகத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
ஸ்ரீசித்தர் பீடத்தில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு இன்று(புதன்கிழமை) காலை 8 மணி முதல் இரவு 8மணி வரை ஸ்ரீமங்களம் தரும் சனீஸ்வரருக்கு 64வகையான அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை, மஹா யாக வேள்விகளுடன் சிறப்பு வழிபாடுகள் ‘சாக்தஸ்ரீ’ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
காலை 8மணிக்கு மங்கள இசை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கன்னிகா பூஜை, லட்சுமி பூஜையுடன் சனிப்பெயர்ச்சி விழா தொடங்கியது. காலை 10மணிக்கு மஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவருக்கு ஹோமத்துடன், சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
அதனைத்தொடர்ந்து, காலை சரியாக 10.51மணிக்கு சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியான நேரத்தில் ஸ்ரீமங்களம் தரும் சனீஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், குங்குமம், சந்தனம், தேன், நெய், திருநீறு, பஞ்சாமிர்தம், எள் உள்பட 64வகையான அபிஷேகம் ‘சாக்தஸ்ரீ’ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் பக்தர்கள் திரளாக பங்கேற்க வெகுசிறப்பாக நடைபெற்றது.
அபிஷேகத்தினை தொடர்ந்து மஹா யாக வேள்வியும், சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனையுடன் சனிப்பெயர்ச்சி வழிபாடுகள் நடைபெற்றது. மதியம் 1மணிக்கு பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8மணிக்கு தீபாராதனையுடன் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பு வழிபாடுகள் யாவும் நிறைவுற்றது.
சனிப்பெயர்ச்சியினால் பரிகாரம் செய்திடவேண்டிய கடகம், சிம்மம், விருச்சகம், மகரம், கும்பம், மீனம் ராசிக்குரியவர்களும் மட்டுமின்றி மீதமுள்ள மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், தனுசு என அனைத்து ராசிக்காரர்களும் தங்களது குடும்பத்தினருடன் வந்து தங்களது ராசிக்கேற்ற வகையிலான வழிபாடுகளை சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் மேற்கொண்டு மகிழ்ந்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் ”சாக்தஸ்ரீசற்குரு சீனிவாச சித்தர்” தலைமையில் மகளிர் அணியினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.